கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

கீழணை கட்டிய ஆர்தர் காட்டனுக்கும் மணி மண்டபம் தேவை: விவசாயிகள் எதிர்பார்ப்பு


காட்டுமன்னார்கோவில் அருகே தஞ்சை மாவட்டம், அணைக்கரையில் உள்ள கீழணை. (உள்படம்) சர்ஆர்தர்காட்டன்
தஞ்சை மாவட்டம், அணைக்கரையில் உள்ள கீழணை. (உள்படம்) சர்ஆர்தர்காட்டன்
177 ஆண்டுகளை கடந்த பழமையும், பெருமையும் பெற்ற தஞ்சை மாவட்டம், அணைக்கரையில் உள்ள கீழணையைக் கட்டிய பிரிட்டிஷ் பொறியாளர் சர்ஆர்தர் காட்டனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்பது நாகை, தஞ்சை, திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.



÷கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து காவிரி நதி 149 மைல் கடந்து வந்து மேட்டூர் அணையை அடைகிறது. மீண்டும் காவிரி நதி மேட்டூரிலிருந்து 117 மைல் கடந்த வந்து கல்லணையை அடைகிறது.

÷மீண்டும் கல்லணையிலிருந்து 67 மைல்கள் கடந்து வந்து கீழணையை அடைகிறது. முடிவாக கீழணையிலிருந்து 33 மைல் கடந்து போய் வங்கக்கடலில் சங்கமிக்கிறது.

÷தஞ்சையை ஆண்ட ராஜாராஜசோழன், கங்கை வரை தனது ஆட்சியை நிறுவி அதன் வெற்றிச் சின்னமாக கங்கை கொண்ட சோழபுரம் என்ற கற்கோயிலை நிறுவினான். அதன் மதில் சுவர்களை கொண்டு ஆங்கிலேயர்களால் கீழணை கட்டப்பட்டது.

÷கி.பி. 1836-ம் ஆண்டு பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் என்பவரால் தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், அணைக்கரை கிராமத்தில் கீழணை கட்டப்பட்டுள்ளது.

÷கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கீழணை கட்டப்பட்டுள்ளது. இக்கீழணை மூலம் கடலூர், தஞ்சை, நாகை மாவட்டங்கள் பாசனம் பெறுகின்றன.

÷இக்கீழணை வெள்ளக் காலங்களில் 4.50 லட்சம் கனஅடி உச்சக்கட்ட வெள்ளநீர் வடிகாலாக பயன்பட்டு வருகிறது. கீழணை கட்டப்பட்டதிலிருந்து கல்லணையிலிருந்து உள்ளாறு மூலம் கொள்ளிடத்தில் விடப்படுகிறது.

÷கீழணைப் பாசனத்துக்காக வடவாறு, வடக்குராஜன் வாய்க்கால், கவரப்பட்டு வாய்க்கால், வீராணம் ஏரி, கஞ்சங்கொல்லை வாய்க்கால், கான்சாகிப் வாய்க்கால், தெற்குராஜன் வாய்க்கால், குமிக்கி மணியாறு, மேலராமன் வாய்க்கால் ஆகிய வாய்க்கால்கள் மூலம் 1,26,839 ஏக்கர் பாசன பரப்புக்குப் பயன்பட்டு வருகிறது.

÷கொள்ளிடம் ஆறு அணைக்கரையில் இரண்டாகப் பிரிந்து வடக்குப் பிரிவு கொள்ளிட ஆறு, தெற்குப் பிரிவு கொள்ளிட ஆறு என அணைக்கரை என்ற கிராமத்தை தீவு போல் ஏற்படுத்தி, பின்னர் 5 கி.மீ. தூரத்தில் இரண்டும் சங்கமித்து பின் 33 மைல்கள் சென்று வங்கக்கடலில் கலக்கிறது.

÷கீழணை உபகோட்ட அலுவலகம் மற்றும் கீழணைப் பாசன பொறியாளர் பிரிவு ஆகிய இரண்டு அலுவலகங்கள் அணைக்கரையில் சென்னை மண்டலம், வெள்ளாறு வடிநில வட்டம், கடலூர், சிதம்பரம் கொள்ளிடம் வடிநிலை கோட்டம், பொதுப்பணித்துறை அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

÷தமிழக முதல்வர் முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுவிக்குக்கு மணி மண்டபத்தை அமைத்து திறந்து வைத்துள்ளார்.

தற்போது கல்லணையைக் கட்டிய கரிகால சோழனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.

÷இச்சிறப்பு வாய்ந்த கீழணையை கட்டிய பொறியாளர் சர்ஆர்தர் காட்டனுக்கு அணைக்கரையில் உள்ள பொதுப்பணித்துறை விடுதி வளாகத்தில் தமிழக முதல்வர் மணி மண்டபம் அமைக்க அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்த அணையின் மூலம் பாசனம் பெற்று வரும் விவசாயிகள் மற்றும் சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
http://dinamani.com/

0 கருத்துகள்: