கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

அணைக்கரையில் உள்ள கீழணை பாலம் விரிசல்:



அணைக்கரையில் உள்ள கீழணை பாலம் விரிசல்: போக்குவரத்து நிறுத்தத்தால் சென்னை-கும்பகோணம் போக்குவரத்து பாதிப்பு
காட்டுமன்னார்கோயில் அருகே அணைக்கரையில் உள்ள 177 ஆண்டுகள் பழமை வாய்ந்த கீழணை பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

177 ஆண்டுகளை கடந்த பழமையும், பெருமையும் பெற்ற தஞ்சை மாவட்டம் அணைக்கரையில் உள்ள கீழணையை பிரிட்டிஷ் பொறியாளர் சர்ஆர்தர் காட்டன் என்பவர் கட்டினார். இந்திய நாட்டில் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து காவிரி நதி 149 மைல் கடந்து வந்து மேட்டூர் அணையை அடைகிறது. மீண்டும் காவிரி நதி மேட்டூரிலிருந்து 117 மைல் கடந்த வந்து கல்லணையை அடைகிறது. மீண்டும் கல்லணையிலிருந்து 67 மைல்கள் கடந்து வந்து கீழணையை அடைகிறது. முடிவாக கீழணையிலிருந்து 33 மைல் கடந்து போய் வங்கக்கடலில் சங்கமிக்கிறது.

தஞ்சையை ஆண்ட ராஜாராஜசோழன் மக்கள் ராஜேந்திரசோழன் கங்கை வரை தனது ஆட்சியை நிறுவி அதன் வெற்றிச் சின்னமாக கங்கை கொண்ட சோழபுரம் என்ற கற்கோயிலை நிறுவினான். அதன் மதில் சுவர்களை கொண்டு ஆங்கிலேயர்களால் கீழணை கட்டப்பட்டது. கிபி 1836ம் ஆண்டு பொறியாளர் சர் ஆர்தர்காட்டண் என்பவரால் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் அணைக்கரை கிராமத்தில் கீழணை கட்டப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கீழணை கட்டப்பட்டுள்ளது. இக்கீழணை மூலம் கடலூர், தஞ்சை, நாகை மாவட்டங்கள் பாசனம் பெறுகிறது.இக்கீழணை வெள்ளக் காலங்களில் 4.50 லட்சம் கனஅடி உச்சக்கட்ட வெள்ளநீர் வடிகாலாக பயன்பட்டு வருகிறது.

கீழணை கட்டப்பட்டதிலிருந்து கல்லணையிலிருந்து உள்ளாறு மூலம் கொள்ளிடத்தில் விடப்படுகிறது. கீழணை பாசனத்திற்காக வடவாறு, வடக்குராஜன் வாய்க்கால், கவரப்பட்டு வாய்க்கால், வீராணம்ஏரி, கஞ்சங்கொல்லை வாய்க்கால், கான்சாகிப் வாய்க்கால், தெற்குராஜன் வாய்க்கால், குமிக்கி மணியாறு, மேலராமன் வாய்க்கால் ஆகிய வாய்க்கால்கள் மூலம் 1,26,839 ஏக்கர் பாசன பரப்பிற்கு பயன்பட்டு வருகிறது. கொள்ளிடம் ஆறு அணைக்கரையில் இரண்டாக பிரிந்து வடக்குபிரிவு கொள்ளிட ஆறு, தெற்குபிரிவு கொள்ளிடஆறு என அணைக்கரை என்ற கிராமத்தை தீவு போல் ஏற்படுத்தி, பின்னர் 5 கி.மீ தூரத்தில் இரண்டும் சங்கமித்து பின் 33 மைல் சென்று வங்கக்கடலில் கலக்கிறது.

இந்த கீழணை பாலத்தின் 16,17 மதகுகள் விரிசல் விட்டதால் ஞாயிற்றுக்கிழமை இரவு பாலத்தில் போக்குவரத்து இயக்கம் நிறுத்தப்பட்டது. இதனால் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அரியலூர், நாகை, தஞ்சை, கடலூர் மாவட்டத்தை இணைக்கும் இந்த பாலம் விரிசல் விட்டு போக்குவரத்திற்கு நிறுத்தப்பட்டதால், மேற்கண்ட 4 மாவட்ட மக்களுக்கும் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உழவர் சங்க கூட்டமைப்பு தலைவர் பி.ரவீந்திரன் தெரிவித்தது: தமிழகஅரசு உத்தரவின் பேரில் பலமிழந்த கீழணை பாலத்தை 2002 ம் ஆண்டு அப்போதிருந்த தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஆலோசகர் மோகனகிருஷ்ணன் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளித்தார். அந்த அறிக்கையில் கீழணை பாலம் வாகனங்கள் இயக்க தகுதியற்றது என தெரிவித்துள்ளார். அதன் பின்னர் பேருந்துகளை மட்டும் இயக்குவது என அரசு அறிவித்தது. ஆனால் பேருந்துகள் மட்டுமல்லாமல் மணல், ஜல்லி மற்றும் 36 முதல் 40 டன் கொண்ட டாரஸ் லாரிகள் வரை இயக்கப்பட்டன. இதனால் பாலம் பலமிழந்தது.

அதன் பின்னர் ரூ.6 கோடி செலவில் பாலம் சீரமைத்து பலப்படுத்தப்பட்டது. பின்னர் பேருந்துகள் மட்டும் இயக்குவது என முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறையினரின் அலட்சிய போக்கால் அனைத்து கனரக வாகனங்களும் பாலத்தில் இயக்கப்பட்டதால் மீண்டும் தற்போது பாலத்தில் விரிசல் ஏற்பட்டு அபாய கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் இதற்காக மாற்றாக கீழபள்ளூர்-மதனத்தூர் இடையே ரூ.26 கோடி செலவில் கொள்ளிடத்தில் பாலம் அமைக்க அரசு முடிவு செய்து நிலுவையில் உள்ளது. காட்டுமன்னார்கோயில் அருகே ரூ.33 கோடி செலவில் முட்டம்-மணல்மேடு இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பாலம் பணி முடிவுற்று திறக்கப்ட்டால் திருச்சி-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு மாற்றாக இருக்கும் என்கிறார் பி.ரவீந்திரன்.
நன்றி:http://dinamani.com

0 கருத்துகள்: