கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை!

 செப்டம்பர்  14 உலக முதலுதவி தினம்!
இந்தியாவில் விபத்துகளால் உயிர் இழப்பவர்களில் 80 சதவிகிதம் பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதல் ஒரு மணி நேரத்தில் பலியாகிறார்கள்.

இத்தகைய விபத்தில் சிக்கியவர்களுக்கு முறையான முதலுதவி கிடைத்திருந்தால், அவர்கள் நிச்சயம் காப்பாற்றப்பட்டு இருப்பார்கள். அந்த அளவுக்கு முதலுதவி என்பது தேவையானதாகவும், அவசியமாகவும் இருக்கின்றது.

ஆபத்தான நிலையில் இருப்பவர்களை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லும் முன், அவர்களுக்கு தேவையான அவசர சிகிச்சையே “முதலுதவி” எனப்படும்.

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர்  14ம் தேதியை “உலக முதலுதவி தினமாக” உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், ஒருவர் ஆபத்தான நிலையில் இருக்கும் பொழுது, அவருக்கு எந்த மாதிரியான உதவிகளைச் செய்ய வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் அதனுடைய முக்கியத்துவத்தை வலியுறுத்தி மக்களிடம் பிரச்சாரம் செய்ப்படுகிறது.

இந்தக் கட்டுரையை வாசிப்பவர்கள் பிறருக்கு உதவி செய்வது பற்றிய ஒரு பார்வை, முதலுதவி என்றால் என்ன, முதலுதவி எவ்வாறு இருக்க வேண்டும், முதலுதவிக்கு தேவையான பொருட்கள் என்ன போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்.

ஆபத்தான நிலையில் (உடல்நிலை சரியில்லாமல் அல்லது காயம் பட்டு) இருப்பவருக்கு விரைவாக, சரியான முறையில் மருத்துவ உதவி அளிப்பது முதலுதவி என்று அழைக்கப்படும். ஆபத்தான நிலையில் இருக்கும் ஒருவருக்கு, அவருடைய உயிரைக்காப்பாற்ற அப்பொழுது அவருக்கு என்ன கொடுக்க வேண்டும், என்ன கொடுக்கக் கூடாது என்பதை அறிந்து சமயோசிதமாக செயல்பட வேண்டும்.

முதலுதவி செய்பவர் மருத்துவர்கள் வந்து அவருக்கு சிகிச்சை அளிக்கும் வரை அவருடன் இருந்து, முழு விபரத்தையும் தெரிவிக்க வேண்டும். ஏனென்றால்,  முதலுதவி என்பது அந்த நேரத்தில் செய்யக்கூடிய தற்காலிகமான சிகிச்சை என்பதை நாம் உணர வேண்டும். அதை உணர்ந்து நாம் ஒவ்வொருவரும் முதலுதுவி செய்ய இந்நாளில் சபதமேற்க வேண்டும்.

வகுப்பறையில் முதுலுதவி எப்படி செய்ய வேண்டும்?

1. எப்பொழுதும் வகுப்பறையில் விழிப்புடன் இருக்க வேண்டும். ஆபத்தான பகுதிகள் இருப்பின் அதை கண்காணித்தவராக இருக்க வேண்டும்.
2. முதலுதவி செய்வதில் வயது வரம்பு கிடையாது. ஒருவருக்கு காயம் ஏற்பட்டிருப்பின் வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் உடனடியாக உதவ வேண்டும்.
3. சம்பவ இடத்தில் அமைதியை ஏற்படுத்த வேண்டும். இல்லையென்றால், பாதிக்கப்பட்டவருக்கு பீதியை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்து விடும்.
4. வகுப்பறையில் முதலுதவிப் பெட்டி அமைந்திருக்கும் இடத்தை அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.
5. பாதிக்கப்பட்டவரை யாரும் சூழ்ந்திருக்காதபடி கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் இயற்கையின் காற்று அவருக்கு கிடைக்கும்.

விளையாடும்பொழுது ஏற்படும் காயங்களுக்கு எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும்?

1. மைதானம் மற்றும் இதர இடங்களில் விளையாடும்பொழுது சுளுக்கு, இரத்தப் போக்கு மற்றும் மூட்டு காயங்கள் ஏற்படும்.
2.  இதுபோன்று பாதிப்புகள் ஏற்படும்பொழுது, பாதிக்கப்பட்டவரை இழுக்கவோ அல்லது நகர்த்தவோ செய்ய  வேண்டாம். ஸ்ட்ரச்சரில் வைத்து தேவையான இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
3. இரத்தப் போக்கு அல்லது இரத்தக் கசிவு ஏற்பட்டவருக்கு சீக்கிரம் சிகிச்சை அளிக்க வேண்டும். உடனடியாக, இரத்தக் கசிவை நிறுத்த முதலுதவிப் பெட்டியில் இருக்கும் கட்டுத்துணி மற்றும் பஞ்சு வைத்து அடி பட்ட இடத்தை சுத்தம் செய்ய வேண்டும். காயம் பட்டவருக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது. இக்கட்டான நேரத்தில் தேவையை உணர்ந்து கொஞ்சம் தண்ணீர் கொடுக்கலாம்.

வீட்டில் ஏற்படும் பொழுது…

1. நல்ல வசதிகளை உடைய முதலுதவிப் பெட்டி அனைவர் வீட்டிலும் இருக்க வேண்டும்.
2. தீக்காயங்கள் மற்றும் வெட்டுக்கள் போன்ற பொதுவான காயங்களுக்கு சிகிச்சை அளிக்க தெரிந்திருக்க வேண்டும்.
3. சுளுக்கு ஏற்படும் இடங்களில் நேரடியாக ஐஸ் கட்டி வைக்கக் கூடாது. அதை, ஒரு பாலிதின் பையில் வைத்து சுளுக்கு ஏற்பபட்ட இடத்தில் வைக்கும்பொழுது பயனுள்ளதாக இருக்கும்.
4. சிறு தீக்காயங்களுக்கு மட்டுமே கிரீம் போன்றவைகளை பயன்படுத்த வேண்டும்.
5. வீட்டில் எப்பொழுதும், எந்ரேமும் மருத்துவர்களின் போன் நம்பரும், முகவரியும் அவசரத்திற்கு அனைவரும் பார்க்கும்படி ஒட்டி வைத்திருக்க வேண்டும்.

சாலையில் ஏற்படும் பொழுது…

1. உங்களுடைய காரில் எப்பொழுதும் முதலுதவிப் பெட்டி இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
2. சாலையில் விபத்து ஏற்படும்பொழுது உதவி செய்ய சிலர் அசிங்கமாக நினைப்பார்கள். அப்பொழுது நாம் நம்முடைய முதலுதவிப் பெட்டியை எடுத்து தேவையான சிகிச்சையை அளிக்க வேண்டும்.
ஒரு சில நேரங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டால், அதற்கு சிகிச்சை அளிக்க தெரியவில்லை என்றால், அப்பொழுது உதவிக்கு மற்றவர்களை அழைக்க வேண்டும்.
3. சில பகுதிகளில் உங்களுக்கு உதவிக்கு ஆட்கள் இருக்காது. அதுபோன்ற இடங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
4. நீங்கள் உதவி செய்யும்பொழுது, பிறருக்கு இடையூறு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
5. பாதிக்கப்பட்டவருக்கு அந்த நேரத்தில் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல், மருந்துகளையோ அல்லது டானிக்கோ எதுவும் கொடுத்துவிடக்கூடாது.

முதலுதவி பெட்டியில் என்னென்ன பொருட்கள் இருக்க வேண்டும்?

1. காயம் பட்ட இடத்தை சுத்தம் செய்ய துணி இருக்க வேண்டும்.
2. கட்டுத் துணி மற்றும் பேண்டேஜ் இருக்க வேண்டும்.
3. நோய்க் கிருமிகளை அழிக்கும் மருந்து மற்றும் காயத்தை ஆற்றுவதற்கான ஆயின்மெண்ட் இருக்க வேண்டும்.
4. ஒட்டும் தன்மையுள்ள டேப் ரோல்கள் இருக்க வேண்டும்.
5. முக்கோண வடிவில் சுற்றுவதற்கு பேண்டேஜ் இருக்க வேண்டும்.
6. துணிகளை வெட்ட மற்றும் காயம் பட்ட இடத்தை சுற்றி இருக்கும் முடிகளை வெட்ட நல்ல கத்திரி இருக்க வேண்டும்.
7. தீக்காயங்கள் ஏற்பட்ட இடங்களில் போடுவதற்கான கிரீம் இருக்க வேண்டும்.
8. முறிந்த எலும்பை இணைப்பதற்காக வைத்து கட்டப்படும் சிம்பு அல்லது கட்டை இருக்க வேண்டும்.
9. தெர்மோ மீட்டர் இருக்க வேண்டும்.
10. காகிதம் மற்றும் பென்சில் இருக்க வேண்டும்.
இதுவே, முதலுதவிப் பெட்டியில் இருக்க வேண்டிய முக்கியமான – எப்பொழுதும் தேவையான பொருட்களாகும்.

முதலுதவிப் பெட்டியை எப்பொழுதும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளல்

1. முதலுதவிப் பெட்டியில் சிவப்பு நிற “ப்ளஸ்” போட்டிருக்க வேண்டும்.
2. அதில், மருத்துவர்கள் பெயர் அல்லது தொடர்பு எண்கள் எழுதியிருக்க வேண்டும்.
3. வீட்டில் எப்பொழுதும் முதலுதவிப் பெட்டியை எடுக்கின்ற இடமாக இருக்க வேண்டும்.
4. பூட்டிய அலமாரி போன்ற எடுக்க முடியாத இடங்களில் முதுலுதவிப் பெட்டியை வைத்து விடக் கூடாது.
5. ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை முதலுதவிப் பெட்டியைப் பரிசோதனை மற்றும் சுத்தம் செய்ய வேண்டும். தேவையான பொருட்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். அனைத்து மருந்துப் பொருட்களுக்கும் காலாவதியாகும் தேதியை கண்டறிய வேண்டும்.

முதலுதவியைப் பொறுத்தவரை அனைவரும் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதிலும், குறிப்பாக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஏனென்றால், இதனுடைய தேவை எப்பொழுதும் இருக்கும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முதலுதவி விஷயத்தில் ஆசிரியர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?

1. அனைத்து ஆசிரியர்களுக்கும் முதலுதவி பற்றிய பயிற்சி வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
2. வழக்கமான பயிற்சி முறைகளில் ஆசிரியர்கள் முதலுதவி பற்றிய விஷயங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
3. ஆசிரியர்கள் அடிப்படையான இதயம் மற்றும் நுரையீரலுக்குரிய சுவாச மீட்சி சிகிச்சை கற்றிருக்க வேண்டும்.
4. காது, மூக்கு, கண், மூச்சு, முறிவுகள் போன்றவை குழந்தைகளுக்கு ஏற்படும்பொழுது, அதற்கு ஏற்றவாறு முதலுதவி செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
5. சில நேரம் இரத்தம் தடை பட்டு, சுவாசம் நின்று விடும் வாய்ப்பிருக்கிறது. அப்பொழுது, உணர்வு இருக்கின்றதா, இல்லையா என்பதை அறிய உடம்பின் மெல்லிய பகுதியில் கிள்ள வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் அவருடைய வாயை திறந்து உங்களுடைய மூச்சை செலுத்த வேண்டும். அப்படி செலுத்தும்பொழுது மூச்சடைப்பு  நிற்கும்.

முதலுதவி விஷயத்தில் பெற்றோர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?

1. பெற்றோர்கள் சிறு சிறு காயங்களுக்கு கட்டுப் போடுவது பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
2. உடம்புகளில் வீக்கங்கள் ஏற்படும்பொழுது எந்தெந்த பேண்டேஜிகள் பயன்படுத்துவதுஎன்பது பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
3. இரத்தக் கசிவு, தொடர்ந்து இரத்தம் வடிதல் போன்றவைகளை எவ்வாறு நிறுத்துவது போன்றவைகளை கண்டிப்பாக தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும்.
4. அதுபோன்று, சமையலறையில் ஏற்படும் கத்தி வெட்டுகள், கீறல்கள் போன்றவற்றிற்கு எவ்வாறு சிகிச்சை செய்ய வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருத்தல் அவசியமாகும்.

இவ்வாறு, முதலுதவி விஷயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு தருணத்திலும் மற்றவர்களுக்கு உதவுவதில், மற்றவர்களின் உடல்நிலைகளில் கவனம் செலுத்துவதில் முன்னணியில் நின்று செயல்பட வேண்டும்.
நன்றி : தி ஹிந்து  11.09.2013

அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்:
எவர் ஒருவர் (ஒரு) நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அதுபோல் பத்துப் பங்கு (நன்மை) உண்டு; எவர் ஒருவர் (ஒரு) தீமையைச் செய்கிறாரோ அதைப் போன்ற அளவுடைய கூலியே கொடுக்கப்படுவார்.  அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன்  6: 160)
நாம் பிறருக்கு உதவுவதின் மூலம், இறைவன் நமக்கு உதவக் காத்திருக்கின்றான். அதற்கு, வருகின்ற செப்டம்பர் 14 உலக முதலுதவி தினத்தில் நாம் உறுதியேற்போம். மக்களுக்கு உதவ முன்வருவோம்.
தமிழில் : நெல்லை சலீம்
 http://www.thoothuonline.com

0 கருத்துகள்: