கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

இணையதளம், ஃபேஸ்புக் பயன்பாடுகளும் முஸ்லிம்கள் அணுகவேண்டிய முறைகளும்.


எழுத்தும், பேச்சும் மாபெரும் அறிவாயுதங் களாகும். இவ்விரு திறமைகளும் ஒருவருக்கு அமையுமானால் அவர் மிகச்சிறந்த தலைவராக வும், வழிகாட்டியாகவும், நிர்வாகியாகவும் உருவாக வாய்ப்புகள் உண்டு.

இரண்டையும் சரிவரப் பயன்படுத்தாதவர்களும், தவறாகப் பயன்படுத்துபவர்களும் வாய்ப்பு களை இழந்தவர்களின் பட்டியலில்தான் இடம் பெறுவார்கள்.

பேச்சாளர்களை விட நாட்டில் எழுத்தாளர்கள் அதிகம். கவிதை, கட்டுரை, இலக்கியம் என பல்வேறு தளங்களில் இவர்களின் பங்களிப்புகள் அமைகின்றன. சிறந்த பேச்சு ஏற்படுத்தும் தாக்கத்தைவிட, சிறந்த எழுத்து ஏற்படுத்தும் தாக்கம் அதிகமாகும்.

அது நின்று; நிதானித்து; யோசித்து; ஒரு மனிதனை நீண்டகால சிந்தனைப் போராட் டத்திற்கு வழிவகுக்கும்.

இன்று சமூக இணையதளங்கள் வந்தபிறகு அதைப் பயன்படுத்துபவர்கள் அனைவரும் தங்களை எழுத்தாளர்களாக உருவாக்கிக் கொள்கிறார்கள். அத்தகைய நல்வாய்ப்பை இணையதளங்களும், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களும் வழங்குகின்றன.

ஒரு புத்தகம் அல்லது பத்திரிக்கையில் எழுதும் கருத்துகள் போய்ச் சேரும் வாசகர் எண்ணிக்கையை விடக் கூடுதலான இலக்கை இவைகள் அடைய வழிவகுக்கின்றன. அதுவும் விரைவாக!

இந்தியாவில்; தமிழகத்தில் சிறுபான்மை முஸ்லிம் சமூகம் ஒரு காலத்தில் தங்களது கருத்துக்களைப் பரப்பவும், வாதிடவும், தவறான கருத்துகளுக்கு பதில் சொல்லவும் வாய்ப்புகளும், வழிகளும் இல்லையே என ஏங்கியது.

அந்த ஏக்கத்தை இணைய தளங்களும், ஃபேஸ் புக் போன்ற சமூக ஊடகங்களும் ஓரளவு நிவர்த்தி செய்திருக்கின்றன. படித்தவர்களும், வேலை நிமித்தமாக வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்பவர்களும் இதில் பெரும் பங்காற்றுகிறார்கள்.

இதில் ஆறுதல் அடையும் அதேநேரம், துயரமடையச் செய்யும் சில நிகழ்வுகளும் நடக்கின்றன.

சில இளைஞர்கள் உணர்ச்சிப் போக்கில் கருத்துக்களைப் பதிகிறார்கள். சிலர் தாங்கள் ஏதோ ‘முஸ்லிம் நாடுகளில்’ வாழும் மன நிலையிலும் கருத்துக்களைப் பதிகிறார்கள். சிலர் தங்களது கருத்துக்களை முஸ்லிம்கள் மட்டுமே படிக்கிறார்கள் என்ற மனநிலையில் பதிகிறார்கள். சிலர் நடுநிலையாளர்களையும் எதிரிகளாக்கும் வகையில் பொறுப்பற்றத்தனமாக கருத்துக்களைப் பதிகிறார்கள்.

இது சமீபகாலமாக அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. பண்பாடு இல்லாமல், நாகரீகம் இல்லாமல், ஒரு உன்னதமான சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் என்ற பொறுப்பு இல்லாமல் சிலர் வெளியிடும் கருத்துக்களும், ஆவேசமானப் பதிவுகளும் இதை கவனிக்கும் பிற சமூக மக்களை மட்டுல்ல; சொந்த சமூக மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

இவர்களிடம் பக்குவம் இல்லையா? பண்பாட்டுடன் கூடிய அறிவு இல்லையா? என பிறர் கேள்வி கேட்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இயக்க வேறுபாடுகள் & மோதல்கள்

தலைவர்களின் மீதான எதிர் கருத்துக்கள்

பிற சமூகங்களைப் பற்றிய மதிப்பீடுகள்

அரசியல் தலைவர்கள் குறித்த விமர்சனங் கள்

பொது அரங்கில் நடைபெறும் சம்பவங்கள்

சர்வதேச நிகழ்வுகள்

போன்றவை குறித்து சிலர் பக்குவமில்லாமல் எழுதும் கருத்துக்கள் முஸ்லிம் சமூகத்தின் மீதான மதிப்பீடுகளைக் குறைக்கிறது.

நாம் பன்முக சமூகங்கள் வாழும் உலகத்தில் வாழ்கிறோம் என்பதையும், நம்மைச் சுற்றிலும் நல்லெண்ணம் கொண்ட சமூக மக்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள் என்பதை யும், நாம் பதியும் கருத்துக்கள் எதிரிகளின் எண்ணிக்கையை கூடுதலாக உருவாக்கி விடக் கூடாது என்பதையும் மறந்து விடுகிறார்கள். அல்லது இதைப் புரியாமல் வாழ்கிறார்கள்.

அநாகரீகமான சொல்லாடல்களும், முரட்டுத்தனமான விமர்சனங்களும்; நியாயமாக நமக்கு கிடைக்க வேண்டிய ஆதரவுகளை ஒரு சமூகமே இழக்க வேண்டிய சூழல் உருவாவதை அப்படிப்பட்ட சகோதரர்கள் உணர வேண்டும்.

தாலிபான்கள் விவகாரமாக இருக்கட்டும்; திரைப்படங்கள் குறித்த சர்ச்சைகளாகட்டும்; விடுதலைப் புலிகள் குறித்த விமர்சனங்களாக இருக்கட்டும்; சவூதியில் தலை துண்டிக்கப்பட்ட இலங்கைச் சிறுமி ரிசானா விவகாரமாக இருக்கட்டும்; சமீபகாலமாக ஃபேஸ் புக்கில் பரிமாறப்படும் எதிர்வினைகள் முஸ்லிம் சமூகத்திற்கு வலுவான ஆதரவை ஏற்படுத்துவதற்கு பதிலாக, பெருவாரியான ஆதரவாளர்களை எதிர் முகாமுக்கு தள்ளியிருக்கிறது என்ற பொதுவான கருத்து குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டும்.

எதிரிகளிடம் விவாதம் புரியுங்கள். ஆனால் கண்ணியத்தை கடைப்பிடியுங்கள். நமது கருத்தை ஆழமாக வாதிடுங்கள். ஆனால் தரத்தைப் பின்பற்றுங்கள்.

அறிவை உணர்ச்சி வென்றுவிடக் கூடாது. கோபம் பண்பாட்டை குலைத்துவிட அனுமதிக்கக் கூடாது. விமர்சனங்கள் எல்லை மீறிவிடக் கூடாது. திருக்குர்ஆன் ‘உண்மையைப் பேசுக (3:17), நேர்மையாகப் பேசுக (33:70), நீதமாகப் பேசுக (6:152), நல்லதைப் பேசுக (2:83), மிக அழகியதைப் பேசுக (17:53), மரியாதையாகப் பேசுக (17:23)’ என மனிதர்களுக்கு அறிவுரை வழங்குகிறது. இதை சற்று எண்ணிப் பாருங்கள்.

நமது கருத்துப் பதிவுகள் எதிரிகளின் மனப்போக்கை மாற்றக் கூடியதாக இருக்க வேண்டும். நடுநிலையாளர்களை வியப்பில் ஆழ்த்தக் கூடியதாக இருக்க வேண்டும். பதிலடி களைக் கூட நிதானமாகவும், அறிவுப்பூர்வ மாகவும் பதியுங்கள்.

மாறாக, நமது கருத்துப் பதிவுகள் எதிரிகளுக்கு ஆதரவையும், அனுதாபத்தையும் ஏற்படுத்தக் கூடியதாக அமைந்துவிடக் கூடாது. நமது நியாயங்களை பலமிழக்க செய்துவிடக் கூடாது.

சமூக ஊடகங்களும், இணைய தளங்களும் அனைத்து தரப்பினராலும் கூர்ந்து கவனிக்கப் படுகிறது என்பதையும், நமது கருத்துக்கள் நம் சமூகத்தின் தரத்தை மதிப்பிடுவதாகவும் இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

குழாயடிச் சண்டைகளை; உள்விவகாரங்களை; தனிநபர் தாக்குதல்களை; மூன்றாம் தர எழுத்துக் களை தயவு செய்து இணையங்களிலும், ஃபேஸ் புக் போன்ற சமூக ஊடகங்களிலும் பயன்படுத்தக் கூடாது. கோபத்தோடும், அவசரப் பட்டும், பொறுப்பில்லாமலும் கருத்துக் களைப் பதியாதீர்கள். பல சமூகத்தினரும் நம்மை கவனிக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பெருந்தன்மை, கண்ணியம், தொலை நோக்கு, சமூகப் பொறுப்பு, மன்னிப்பு என்பதையெல்லாம் கவனத்தில் கொண்டு ஊடக உலகில் பணியாற்ற வேண்டியுள்ளது.

தனது சிறிய தந்தை ஹம்ஸாவைப் படு கொலை செய்த ஹிந்தாவை மன்னித்த மானுட வழிகாட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

நபிகள் நாயகத்தை உஹது போர் களத்தில் எதிர்த்த காலித் பின் வலீத் அவர்கள் பின்னாளில் இஸ்லாத்தை ஏற்று பல போர்களில் நபிகள் நாயகத்தோடு அணிவகுத்தார்கள்.

காலமெல்லாம் நபிகள் நாயகத்தை எதிர்த்தே வாழ்ந்திட்டவர் அபுஜஹல். அவரது மகன் இக்ரிமா அவர்கள் இஸ்லாத்தை ஏற்று நபிகள் நாயகத்தோடு பணியாற்றினார்.

இந்த வரலாறுகளுக்கு உரிய சமூகத்தின் உறுப்பினர்கள் நாம் என்பதை உணருங்கள்.

உயரிய அணுகுமுறைகள் பெரும் வெற்றி களைத் தருகின்றன. நாம் சார்ந்த சமூகத்திற்கு நன்மைகளை அளிக்கின்றன.

கருத்துக்களைப் பரப்பும் ஊடக உலகில் கவனமாகப் பணியாற்றுங்கள். நமது எழுத்துக் களால் ஏற்படும் நன்மைகளுக்கு இறைவனிடம் கூலி உண்டு என்பதைப் போலவே, நமது எழுத்துக்களால் ஏற்படும் விபரீதங்களுக்கும் நாளை மறுமை நாளில் விசாரணை உண்டு என்பதை உணருங்கள்.

நடுநிலையாக சிந்திப்பதும், நேர்மையாக செயல்படுவதும், உண்மையாக வாதிடுவதும் நமது இலக்கணங்கள் என்பதை மறவாதீர்கள்.

 Thamimun Ansari முகநூலில்இருந்து

0 கருத்துகள்: