கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

முன்மாதிரி முஸ்லிம் இல்லம்

.முன்மாதிரி முஸ்லிம் இல்லம்
ஒரு மனிதன் இவ்வுலகில் பெறுகின்ற மிக முக்கியமான பாக்கியங்களில் ஒன்று வீடாகும். அதிலும் சொந்த வீட்டில் வசிப்பது என்பது மிகப் பெரும் பாக்கியமாகும். ஒரு சொந்த வீட்டைக் கட்டுவதற்காக, கட்டிய மனைவியைப் பிரிந்து பல்லாண்டுகள் பாலைவனத்தில் தன் இளமையைத் தொலைக்கும் மக்கள் கணக்கிலடங்காது. எலி வலையானாலும் தனி வலை வேண்டும், வீட்டை கட்டிப்பார், கல்யாணத்தை நடத்திப் பார் என்பதெல்லாம் வீட்டின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக மனிதனால் உருவாக்கப்பட்ட பழமொழிகளாகும்.
கொடும் வெப்பத்திலிருந்தும், ஆட்டும் குளிரிலிருந்தும் மனிதனைப் பாதுகாப்பது வீடு தான். அந்நியப் பார்வைகளை விட்டும் சுதந்திரமாக இருப்பதற்கும், மனைவியுடன் இன்பகரமான இல்வாழ்க்கை நடத்துவதற்கும் வசதியான இடம் வீடு தான். பெண்கள் சுதந்திரமாக வலம் வருவதற்குப் பாதுகாப்பான இடம் வீடு தான். ஒருவர் தன்னுடைய செல்வத்தினையும், பொருட்களையும் பாதுகாத்து வைப்பதற்குரிய சிறந்த இடம் தான் வீடு. வெளி வாழ்க்கையில் இன்னலையும், சிரமங்களையும், கஷ்டங்களையும் தாங்கி வருவோர்க்கு நிம்மதி தரும் இடம் அவன் வசிக்கும் வீடு தான்.
வசிப்பதற்கு ஒரு வீடில்லாமல் தெரு ஓரங்களிலும், சாலை ஓரங்களிலும், பிளாட்பாரங்களிலும், மூலை முடுக்குகளிலும், குப்பை மேடுகளிலும், சாக்கடைகளுக்கு அருகிலும், ஆடு, மாடுகளுடனும், தெரு நாய்களுடனும் தங்களுடைய வாழ்நாளைக் கழிக்கின்ற எத்தனையோ இலட்சம் மக்களை நாம் அன்றாடம் கண்டு வருகின்றோம்.  இவர்களின் நிலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது தான் வீடுகளில் வசிப்பவர்கள் தங்களுக்கு இறைவன் செய்திருக்கும் அருளை உணர முடியும்.
இதோ வீடு எனும் அருளைப் பற்றி இறைவன் கூறுவதைப் பாருங்கள்:
உங்கள் வீடுகளில் உங்களுக்கு அல்லாஹ் நிம்மதியை ஏற்படுத்தினான். கால்நடைகளின் தோல்களிலிருந்து உங்களுக்குக் கூடாரங்களை ஏற்படுத்தினான். உங்கள் பிரயாணத்தின் போதும், ஊரில் நீங்கள் தங்கியிருக்கும் போதும் அவற்றை எளிதாக எடுத்துச் செல்கிறீர்கள். செம்மறி ஆட்டு ரோமங்கள், வெள்ளாட்டின் ரோமங்கள், ஒட்டகத்தின் ரோமங்கள் ஆகியவற்றிலிருந்து ஆடைகளையும், குறிப்பிட்ட காலம் வரை (பயன்படும்) வசதிகளையும் ஏற்படுத்தினான்.
அல் குர்ஆன் 16:80
வாழ்வதற்கு வீடில்லாமல் தட்டழிந்து திரிவது இறைவனுடைய சோதனையாகும்.
யூதர்கள் செய்த அநியாயத்தின் காரணமாக இறைவன் அவர்களை வாழ்வதற்கு வீடில்லாமல் அவர்களை வீட்டை விட்டும் வெளியேற்றி தண்டனை வழங்கினான்.
அவனே வேதமுடையோரில் உள்ள (ஏக இறைவனை) மறுப்போரை அவர்களது இல்லங்களிலிருந்து முதல் வெளியேற்றமாக வெளியேற்றினான். அவர்கள் வெளியேறுவார்கள் என நீங்கள் எண்ணவில்லை. தமது கோட்டைகள் அல்லாஹ்விடமிருந்து தங்களைக் காக்கும் என அவர்கள் நினைத்தனர். அவர்கள் எண்ணிப் பார்த்திராத வழியில் அவர்களை அல்லாஹ் அணுகினான். அவர்களது உள்ளங்களில் அச்சத்தை விதைத்தான். தமது கைகளாலும், நம்பிக்கை கொண்டோரின் கைகளாலும் தமது வீடுகளை நாசமாக்கினார்கள். அறிவுடையோரே படிப்பினை பெறுங்கள்! அவர்கள் வெளியேறுவதை அல்லாஹ் விதித்திருக்காவிட்டால் அவர்களை இவ்வுலகில் தண்டித்திருப்பான். மறுமையில் அவர்களுக்கு நரகின் வேதனை இருக்கிறது. அவர்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்போராக இருந்ததே இதற்குக் காரணம். யார் அல்லாஹ்வைப் பகைக்கிறாரோ அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.
 அல்குர்ஆன் 59:2லி4
வீடில்லாமல் வாழ்வது மிகப் பெரும் சோதனை என்பதால் தான் அதனை அநியாயம் செய்த யூதர்களுக்கு இறைவன் தண்டனையாக விதித்தான். இதிலிருந்து ஒருவன் வாழ்வதற்குரிய வீட்டைப் பெற்றிருப்பது இறைவன் அவனுக்குச் செய்த மிகப் பெரும் பேரருள் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.
இவ்வளவு சிறப்பு மிக்க வீடு என்னும் பாக்கியத்தைப் பெற்றவர்கள் அவ்வீட்டை சொர்க்கத்திற்கு வழிகாட்டும் வீடாக ஆக்க வேண்டாமா?
ஆம்! நம்முடைய வீடு இறைத்தூதர் காட்டித் தந்த அடிப்படையில் அமைந்திருக்குமென்றால் அது நமக்கு சொர்க்க வீட்டைப் பெற்றுத் தரும்.
நம்முடைய வீட்டில் இறைத்தூதர் தடுத்த அம்சங்கள் நிறைந்திருக்கும் என்றால் அது நமக்கு நரக வீட்டைப் பெற்றுத் தரும்.
ஒரு முன்மாதிரி முஸ்லிம் வீடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்குரிய வழிகாட்டுதல்களைப் பார்ப்போம்.
இறை நினைவில் இனிய இல்லம்
ஒரு முஃமினுடைய வீடு இறைவனை நினைவு கூரும் இல்லமாக இருக்க வேண்டும். அங்கு இறை வசனங்கள் ஓதப்பட வேண்டும். மார்க்கம் போதிக்கப்பட வேண்டும்.
உங்கள் வீடுகளில் கூறப்படும் அல்லாஹ்வின் வசனங்களையும், ஞானத்தையும் நினையுங்கள்! அல்லாஹ் நுணுக்கமானவனாகவும்நன்கறிந்தவனாகவும், இருக்கிறான்.
அல்குர்ஆன் 33:34
இறைவன் நினைவு கூரப்படும் இல்லத்திற்கும் இறை நினைவை இழந்த இல்லத்திற்கும் இறைத்தூதர் காட்டும் உவமையைப் பாருங்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் நினைவு கூரப்பட்டுப் போற்றப்படும் இல்லத்தின் நிலை உயிருள்ளவர்களின் நிலைக்கும், அல்லாஹ் நினைவு கூரப்பட்டுப் போற்றப்படாத இல்லத்தின் நிலை உயிரற்றவனின் நிலைக்கும் ஒத்திருக்கிறது.
அறிவிப்பவர்: அபூ மூசா (ரலி)
நூல்: முஸ்லிம் 1429
இறந்தவர்கள் அடக்கம் செய்யப்படும் மையவாடியில் தொழுகை நடைபெறாது. அங்கு குர்ஆன் ஓதப்படாது. மார்க்க ஞானங்கள் பேசப்படாது. ஏனென்றால் அங்கு இருப்பவர்கள் இறந்தவர்கள். மண்ணோடு மண்ணாகி மக்கிப் போனவர்கள்.
நாம் உயிரோடு இருந்தும் நம்முடைய வீட்டில் இறைவன் நினைவு கூரப்படவில்லையென்றால், அங்கு மார்க்க ஞானங்கள் போதிக்கப்படவில்லை என்றால் நம்முடைய வீடும், கப்ருஸ்தானும் ஒன்று தான். ஒரு சிறிய வித்தியாசம் அங்கு உயிரிழந்தவர்கள் உள்ளார்கள். இங்கு உள்ளம் செத்தவர்கள் உள்ளார்கள்.
இன்று நம்முடைய வீடுகள் இறைவனை நினைவு கூரும் இல்லங்களாக உள்ளதா? அல்லது நரகத்திற்கு வழிகாட்டும் இல்லங்களாக உள்ளதா? நாம் சற்று சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
நம்முடைய வீடுகளில் மார்க்கம் தடுத்த இசைப்பாடல்கள் தான் ஆடியோ, வீடியோக்களிலும், தொலைக்காட்சிகளிலும் எல்லா நேரங்களிலும் ஓங்கி ஒலிக்கின்றன, ஆபாசங்கள் நிறைந்த சினிமாக்களும், மூடநம்பிக்கைகளை போதிக்கும் தொடர்களும் தான் நம்முடைய வீட்டுத் தொலைக்காட்சிகளில் அன்றாடம் ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நம்முடைய வீடு இருந்தால் அது இறை நினைவை ஏற்படுத்துமா? நம்முடைய பிள்ளைகள் இறையச்சமுடைய பிள்ளைகளாக உருவாவார்களா?
இன்றைக்கு அதிகமான பெண் குழந்தைகளும், ஆண் குழந்தைகளும் பருவ வயதை அடைவதற்கு முன்பாகவே காதல் என்ற போதையில் மூழ்குவதற்குக் காரணம் நம்முடைய வீட்டுச் சூழல் தான். அது இறை நினைவை மறக்கச் செய்து இறை மறுப்பின் வாசல்களை திறந்து விடக்கூடியதாக உள்ளது.
நம்முடைய வீடு இறை நினைவு நிறைந்த வீடாக இருக்க என்ன செய்யலாம்?
இதோ இறைத்தூதரின் வழிகாட்டுதல்களைப் பார்ப்போம்.
வீட்டில் குர்ஆன் ஓதுதல்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் இல்லங்களை (தொழுகை, ஓதல் நடைபெறாத) சவக் குழிகளாக ஆக்கிவிடாதீர்கள். "அல்பகரா' எனும் (இரண்டாவது) அத்தியாயம் ஓதப்படும் இல்லத்திலிருந்து ஷைத்தான் வெருண்டோடி விடுகிறான்.
அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1430
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் வீடுகளிலே சூரத்துல் பகராவை ஓதுங்கள். எந்த வீட்டிலே சூரத்துல் பகரா ஓதப்படுகிறதோ அங்கே ஷைத்தான் நுழைய மாட்டான்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி)
நூல்: ஹாகிம் 2063
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியைப் படைப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு ஏட்டை எழுதினான். அந்த ஏட்டிலிருந்து இரண்டு வசனங்களை அருளினான். அந்த இரண்டைக் கொண்டு சூரத்துல் பகராவை முடித்தான். மூன்று இரவுகள் ஒரு வீட்டிலே அந்த இரண்டு வசனங்களும் ஓதப்படவில்லையென்றால் ஷைத்தான் அவ்வீட்டை நெருங்கியே தீருவான்.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல்: திர்மிதி 2807
மேற்கண்ட ஹதீஸ்கள் வீட்டில் குர்ஆன் ஓதுவதன் மூலம் நம்முடைய வீடுகளுக்குக் கிடைக்கும் பாக்கியங்களைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. குர்ஆன் ஓதப்படாத வீடுகள் சவக்குழிகளுக்குச் சமம் என்று நபி (ஸல்) எச்சரிக்கை செய்துள்ளனர். மேலும் நம்முடைய வீடுகளில் குர்ஆன் ஓதுவதின் மூலம் ஷைத்தானுடைய வழிகேடுகளை விட்டும் நம்முடைய வீடுகளுக்கு இறைவன் பாதுகாப்பைத் தருகின்றான். நம்முடைய வீடு இறை நினைவு நிறைந்த வீடாக இருக்கும்.
சுன்னத்தான தொழுகைகளை வீட்டில் நிறைவேற்றுதல்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களது தொழுகைகüல் சிலவற்றை உங்களுடைய இல்லங்கüலும் நிறைவேற்றுங்கள் உங்களுடைய இல்லங்களை கப்று (சவக்குழி)களாக ஆக்கிவிடாதீர்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 432
நபி (ஸல்) அவர்கள் "மக்களே! (உபரியான தொழுகைகளை) உங்கள் வீடுகüலேயே தொழுது கொள்ளுங்கள். ஒரு மனிதர் தம் வீட்டில் தொழும் தொழுகையே தொழுகையில் சிறந்ததாகும். ஆனால் கடமையாக்கப்ட்ட தொழுகையைத் தவிர!'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ரலி)
நூல்: புகாரி 731
பெண்கள் கடமையான தொழுகைகளைப் பள்ளியில் தொழுவதை விட வீட்டில் தொழுவது தான் சிறந்ததாகும் என நபியவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். ஆண்கள் கடமையான தொழுகைகளைப் பள்ளியில் தான் தொழ வேண்டும். ஆனால் சுன்னத்தான தொழுகைகளைப் பள்ளியில் தொழுவதை விட வீட்டில் தொழுவது தான் மிகச் சிறந்ததாகும்.
மேலும் நம்முடைய வீட்டில் சுன்னத்தான தொழுகைகளைத் தொழுவதன் மூலம் நம்முடைய குழந்தைகள் அதனைப் பார்த்து அவர்களும் தொழுகை முறையை அறிந்து கொள்வதற்கும், தொழுகையின் பால் நாட்டம் கொள்தவற்கும் தோதுவானதாக அமையும். இதன் மூலம் நம்முடைய இல்லம் இறை நினைவு நிறைந்த வீடாக மாறும்.
வீட்டிலிருந்து ஷைத்தானை விரட்டும் இறை நினைவு
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தமது இல்லத்திற்குள் நுழையும் போதும் உணவு உண்ணும் போதும் அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால், ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), "இன்றைய இரவில் உங்களுக்கு (இங்கே) தங்குமிடமும் இல்லை; உண்ண உணவுமில்லை'' என்று கூறுகிறான். ஒருவர் இல்லத்திற்குள்  நுழையும் போது அல்லாஹ்வை நினைவு கூராவிட்டால் ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), "இன்றைய இரவில் உங்களுக்குத் தங்குமிடம் கிடைத்துவிட்டது'' என்று சொல்கிறான்.
அவர் உணவு உண்ணும்போது அல்லாஹ்வின் பெயர் கூறாவிட்டால் ஷைத்தான் "இன்றைய இரவில் நீங்கள் தங்கும் இடத்தையும் உணவையும் அடைந்து கொண்டீர்கள்'' என்று சொல்கிறான்.
அறிவிப்பவர்:  ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல்: முஸ்லிம் 4106
வீட்டைப் பாதுகாக்கும் இறை நினைவு
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தனது வீட்டிலிருந்து வெளியேறும் போது பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹி லாஹவ்ல வலாகுவ்வத்த இல்லாபில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால் வெளியேறுகின்றேன். அவனையே நான் சார்ந்திருக்கின்றேன். தீமையை விட்டு விலகுவதும், நன்மையைச் செய்ய ஆற்றல் பெறுவதும் அல்லாஹ்வைக் கொண்டே தவிர வேறில்லை) என்று கூறினால் அவனுக்கு "நீ போதுமாக்கப்பட்டு விட்டாய், பாதுகாப்பு வழங்கப்பட்டு விட்டாய்'' என்று (இறைவன் புறத்திலிருந்து) கூறப்படும். அவனை விட்டும் ஷைத்தான் விலகி விடுவான்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: திர்மிதி 3348
இரவு நேரங்களில் வீட்டைப் பாதுகாக்கும் இறை நினைவு
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரவின் இருள் படரத் தொடங்கி விட்டால் அல்லது அந்திப் பொழுதாகி விட்டால் உங்கள் குழந்தைகளை (வெüயே திரியவிடாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், ஷைத்தான்கள் அப்போது தான் (பூமியெங்கும்) பரவுகின்றன. இரவு வேளையில் சிறிது நேரம் கழிந்து விட்டால் அவர்களை (வெüயே செல்ல) விட்டுவிடுங்கள். மேலும், (இரவு நேரத்தில்) கதவுகளைத் தாழிட்டு விடுங்கள். (அப்போது) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். ஏனெனில், ஷைத்தான் மூடப்பட்ட எந்தக் கதவையும் திறப்பதில்லை. உங்கள் தண்ணீர் பையி(ன் வாயி)னைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். உங்களுடைய பாத்திரங்களை மூடி வையுங்கள். (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். (அவற்றை முழுவதும் மூட இயலாவிட்டாலும்) அவற்றின் மீது எதையாவது குறுக்காக வைத்தேனும் மூடிவிடுங்கள். உங்கள் விளக்குகளை அணைத்து விடுங்கள்.
அறிவிப்பவர்:  ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல்: புகாரி 5623
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் உறங்கச் செல்லும் போது உங்கள் வீட்டிலுள்ள நெருப்பை (அணைக்காமல்) விட்டுவிடாதீர்கள்.
அறிவிப்பவர்:  அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல்: புகாரி 6293
இன்று நம்முடைய வீடுகளில் நாம் தூங்கச் செல்லும் முன் கேஸ் அடுப்புகளை அணைத்துள்ளோமா, தேவையில்லாமல் எரியும் அனைத்து விளக்குகளையும் அணைத்துள்ளோமா என்பதைக் கவனித்துக் கொள்ள வேண்டும். இது நபிவழியும், நமக்குப் பாதுகாப்பும் ஆகும்.
வீட்டில் இசைக்கருவிகள் மற்றும் இசைப்பாடல்கள்
இன்றைக்குப் பெரும்பாலான வீடுகளில் இசைக்கருவிகளில் இசைப்பாடல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. இதில் இஸ்லாமியப் பாடல்கள், சினிமாப்பாடல்கள் என்ற வித்தியாசமில்லை. இசையுடன் கூடிய அனைத்துப் பாடல்களும் இசைப்பாடல்கள் தான். இவை மார்க்கத்தில் ஹராமாக்கப்பட்டவையாகும்.
இந்த இசைக்கருவிகள் நம்முடைய வீடுகளில் இருந்தால் இசைப்பாடல்கள் நம்முடைய வீடுகளில் ஒலித்துக் கொண்டிருந்தால் அங்கு இறைவனின் அருளைச் சுமந்து வரும் மலக்குமார்கள் வருகை தர மாட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாயும் மணியோசையும் உள்ள பயணிகளுடன் (அருள்) வானவர்கள் வர மாட்டார்கள்.
அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 4294
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒலியெழுப்பும் மணி, ஷைத்தானின் இசைக் கருவியாகும்.
அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 4295
இசைக்கருவி பயணக்கூட்டத்தாரிடம் இருக்கின்ற காரணத்தினால் தான் மலக்குமார்கள் அவர்களுடன் வருதில்லை. அதே இசைக்கருவி நம்முடைய வீடுகளில் இருந்தாலும் அங்கு மலக்குமார்கள் வரமாட்டார்கள் என்பதை மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.
வீட்டில் உருவப்படங்கள் மற்றும் நாய்கள்
இன்றைக்குப் பெரும்பாலான முஸ்லிம் வீடுகளில் உருவப்படங்களை மாட்டி வைத்துள்ளனர். இறந்து விட்ட தாய், தந்தையர்கள் மற்றும் முன்னோர்களின் உருவப்படங்களை மாட்டி வைப்பதைப் பெருமையாக நினைக்கின்றனர். அல்லது பரக்கத்திற்காக ஏதேனும் பெரியாரின் படத்தை வைத்துள்ளனர். மேலும் வீட்டின் அழகிற்கென விலங்கினங்களின் படங்களையும் மாட்டி வைத்துள்ளனர்.
மேலும் ஹஜ்ருல் அஸ்வத் கல்லை ஒருவர் முத்தமிடுவது போன்ற படங்களும் "புராக்' வாகனம் என்ற பெயரில் பெண் முகவடிவத்தைக் கொண்ட இறக்கைகளை உடைய குதிரை உருவங்களையும் சில வீடுகளில் தொங்க விட்டுள்ளனர்.
நம்முடைய வீடுகளில் இந்த உருவப்படங்கள் மற்றும் நாய்கள் இருப்பதன் மூலம் நம்முடைய வீட்டிற்கு இறைவனுடைய அருளைச் சுமந்து வரும் மலக்குமார்கள் வருகை தர மாட்டார்கள். மேலும் இதற்காக மறுமையில் மிகப் பெரும் தண்டனைகளும் உள்ளன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாயும் (உயிரினங்கüன் சிலைகள் அல்லது) உருவப் படங்களும் உள்ள வீட்டினுள் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூ தல்ஹா (ரலி),
நூல்: புகாரி 3225
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்தபோது, எனது வீட்டு வாசலில் நான் குஞ்சம் உள்ள திரைச் சீலையொன்றைத் தொங்க விட்டிருந்தேன். அதில் இறக்கைகள் கொண்ட குதிரைகளின் உருவங்கள் இருந்தன. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை (அகற்றுமாறு) உத்தரவிட, அவ்வாறே அதை நான் அகற்றிவிட்டேன்.
நூல்: முஸ்லிம் 4281
வீட்டில் உருவப்படங்களும் நாய்களும் இருப்பது எவ்வளவு பயங்கரமான பாவம் என்பதைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள முடியும்
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு (குறிப்பிட்ட) நேரத்தில் வருவதாக வாக்களித்திருந்தார்கள். ஆனால், அந்த நேரம் வந்தும் ஜிப்ரீல் வரவில்லை.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கையில் குச்சியொன்று இருந்தது. அதை அவர்கள் தூக்கியெறிந்துவிட்டு, "அல்லாஹ் தனது வாக்குறுதிக்கு மாறு செய்யமாட்டான். அவனுடைய தூதர்களும் வாக்குறுதிக்குமாறு செய்ய மாட்டார்கள்'' என்று கூறினார்கள். பின்னர் திரும்பிப் பார்த்தபோது, தமது கட்டிலுக்குக் கீழே நாய்க்குட்டியொன்று இருப்பதைக் கண்டார்கள்.
உடனே "ஆயிஷா! இந்த நாய் இங்கு எப்போது நுழைந்தது?'' என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குத் தெரியவில்லை'' என்றேன். உடனே அதை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அது அப்புறப்படுத்தப்பட்ட பின் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் வருவதாகச் சொன்னீர்கள். உங்களுக்காக நான் (எதிர்பார்த்து) அமர்ந்திருந்தேன். ஆனால், நீங்கள் வரவில்லையே (ஏன்)?'' என்று கேட்டார்கள்.
அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், "உங்கள் வீட்டினுள்ளிருந்த நாயே என(து வருகை)க்குத் தடையாக அமைந்துவிட்டது. (வானவர்களாகிய) நாங்கள், நாயும் உருவப் படமும் உள்ள வீட்டிற்குள் நுழையமாட்டோம்'' என்று சொன்னார்கள்.
நூல்: முஸ்லிம் 4272
அபூஸுர்ஆ பின் அம்ர் பின் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் (மதீனாவின் ஆளுநர்) மர்வான் பின் அல்ஹகமின் வீட்டுக்குச் சென்றேன். அங்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள் உருவப் படங்கள் சிலவற்றைக் கண்டார்கள்.
அப்போது "எனது படைப்பைப் போன்று படைக்கத் தயாராகி விட்டவனை விட அக்கிரமக்காரன் வேறு யார் இருக்க முடியும்? அவ்வாறாயின் அவர்கள் ஓர் உயிரணுவைப் படைத்துக் காட்டட்டும்! அல்லது ஒரு தானிய வித்தைப் படைத்துக் காட்டட்டும்! அல்லது கோதுமை வித்தைப் படைத்துக் காட்டட்டும் என்று வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறினான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டுள்ளேன்'' என்றார்கள்
நூல்: முஸ்லிம் 4292
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு பயணத்தை முடித்துக்கொண்டு) என்னிடம் வந்தார்கள். அப்போது நான் (வீட்டு வாசலை) உருவப் படம் உள்ள திரைச் சீலையால் மறைத்திருந்தேன். அதைக் கண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் நிறம் மாறிவிட்டது. அந்தத் திரைச் சீலையை எடுத்துக் கிழித்து விட்டார்கள்.
பிறகு "மறுமை நாளில் மக்களிலேயே மிகக் கடுமையான வேதனைக்குள்ளாவோரில், அல்லாஹ்வின் படைப்புகளுக்கு ஒப்பாகப் படைக்(க நினைக்)கின்றவர்களும் அடங்குவர்'' என்று சொன்னார்கள்.
நூல்: முஸ்லிம் 4282
வீட்டில் உருவப்படங்கள் பொறித்த திரைச்சீலைகளைத் தொங்க விடுவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். அதே நேரத்தில் மதிப்பில்லாத வகையில் பயன்படுத்தும் வகையில் அந்த உருவங்கள் வீட்டில் இருந்தால் அது மார்க்க அடிப்படையில் குற்றமாகாது.
நம்முடைய வீடுகளில் செய்தித்தாள்கள் கிடக்கின்றன. அவற்றில் உருவப்படங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் நாம் அதிலுள்ள செய்திகளைப் படித்தவுடன் அதிலுள்ள உருவப்படங்களை மாட்டி வைப்பதோ கண்ணியப்படுத்துவதோ கிடையாது. அந்த செய்தித்தாள்களை மதிப்பற்ற முறையில் தான் பயன்படுத்துகின்றோம். நாம் சாப்பிடும் போது அவற்றை விரிப்பாக பயன்படுத்துகின்றோம். பல்வேறு விஷயங்களுக்காக அந்த செய்தி பேப்பர்களை கிழித்து விடுகின்றோம். ஒரு செய்திப் பேப்பரை பத்திரப்படுத்தினால் கூட அந்தச் செய்திக்காகத் தானே தவிர அதிலுள்ள உருவப்படத்தை கண்ணியப்படுத்துவதற்காக அல்ல. இது போன்று மதிப்பில்லாத வகையில் பயன்படுத்தும் வண்ணம் உருவங்கள் நம்முடைய வீடுகளில் இருந்தால் அது மார்க்க அடிப்படையில் குற்றமாகாது. இதனை பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் எனது அலமாரி (நிலைப் பேழை) ஒன்றின் மீது (மிருகங்கüன்) உருவங்கள் (வரையப்பட்டு) இருந்த ஒரு திரைச் சீலையைத் தொங்க விட்டிருந்தேன். அதை நபி (ஸல்) அவர்கள் கிழித்து விட்டார்கள்.  ஆகவே, அதிலிருந்து நான் இரு மெத்தை இருக்கைகளைச் செய்து கொண்டேன்.  அவை வீட்டில் இருந்தன.  அவற்றின் மீது நபி (ஸல்) அவர்கள் அமர்வார்கள்.
நூல்: புகாரி 2479
அந்த மெத்தை இருக்கைகளில் அந்த உருவப்படங்கள் இருந்ததாக பின்வரும் ஹதீஸில் வந்துள்ளது.
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் பயணத்திலிருந்து திரும்பினார்கள். நான் உருவப்படமுள்ள ஒரு திரைச் சீலையை விலைக்கு வாங்கி எனது வீட்டிலுள்ள அலமாரி ஒன்றின் மீது திரையாக தொங்கவிட்டிருந்தேன். நபியவர்கள் (வீட்டிற்குள்) நுழைந்த போது நான் செய்திருந்ததை வெறுத்தார்கள். "ஆயிஷாவே, சுவர்களை நீ மறைக்கின்றாயா?'' என்று கேட்டார்கள். உடனே நான் அதைக் கழற்றி விட்டேன். அதனைக் கிழித்து நபியவர்கள் கைவைத்து சாய்ந்திருப்பதற்குரிய இரண்டு தலையணைகளாக ஆக்கினேன். அதில் உருவங்கள் இருக்கும் நிலையிலேயே அந்த இரண்டு தலையணைகளில் ஒன்றிலே நபியவர்கள் சாய்ந்து இருந்ததை நான் பார்த்திருக்கின்றேன்.
நூல்: அஹ்மத் 24908
மேலும் வீடுகளில் தொங்க விடப்படும் திரைச்சீலைகளில் மிகச் சிறிய அளவில் உருவப்படங்கள் இருந்தாலும் மார்க்கத்தில் குற்றமாகாது. இதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: (ஒரு முறை) ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். அவர்களை உடல் நலம் விசாரிக்க நாங்கள் சென்றோம். அப்போது நாங்கள் அவர்களுடைய வீட்டில் ஒரு திரைக்கு அருகே அமர்ந்திருந்தோம். அந்தத் திரையில் உருவப் படங்கள் (வரையப் பட்டு) இருந்தன. ஆகவே, நான் (என்னுடன் இருந்த) உபைதுல்லாஹ் அல் கவ்லானீ அவர்கüடம், "இவர்கள் (ஸைத் (ரலி) அவர்கள்) நமக்கு உருவங்களைப் பற்றிய நபிமொழியை அறிவிக்கவில்லையா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம். ஆனால், ஸைத் (ரலி) அவர்கள் (அதை அறிவிக்கும் போது)  துணியில் பொறிக்கப் பட்டதைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகச் சொன்னார்களே அதை நீங்கள் கேட்கவில்லையா?'' என்று கேட்டார்கள். நான், "கேட்கவில்லை'' என்றேன். அதற்கு அவர்கள், "ஆம்; அவர்கள் அவ்வாறு சொல்லத் தான் செய்தார்கள்'' என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 3226
துணியில் பொறிக்கப்பட்டது என்ற வார்த்தை, துணியில் வரையப்பட்ட மிகச் சிறிய அளவிலான உருவப்படங்களைக் குறிப்பதாகும்.
மேலும் குழந்தைகள் விளையாடுவதற்குரிய பொம்மை உருவங்களை வீடுகளில் வைத்திருப்பதும் மார்க்கத்தில் குற்றமாகாது. இதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
நபி (ஸல்) தபூக் அல்லது கைபர் யுத்தத்திலிருந்து (வீட்டிற்கு) முன்னோக்கினார்கள். (ஆயிஷா (ரலி)) அவர்களின் அலமாரியின் மீது ஒரு திரைச் சீலையிருந்தது. (அதில் ஆயிஷாவிற்குரிய பெண் குழந்தைகளின் உருவம் கொண்ட விளையாட்டுப் பொம்மைகள் இருந்தன.) அப்போது காற்றடித்து ஆயிஷாவின் விளையாட்டுப் பெண் குழந்தை பொம்மைகளை விட்டும் திரைச்சீலையின் ஒரு ஓரத்தை விலக்கியது. அப்போது நபியவர்கள், "ஆயிஷாவே இது என்ன?'' என்று கேட்டார்கள். என்னுடைய பெண் குழந்தைகள் என்று அவர் கூறினார். அவைகளுக்கு மத்தியில் இலை அல்லது தோலால் ஆன இரு இறக்கைகளைக் கொண்ட ஒரு குதிரையை நபியவர்கள் பார்த்தார்கள். உடனே நபியவர்கள், "அவைகளுக்கு மத்தியில் நான் காண்கின்றேனே, அது என்ன?'' என்று கேட்டார்கள். அதற்கவர், குதிரை என்று கூறினார். "அதன் மீது என்ன?'' என்று நபியவர்கள் கேட்டார்கள். "இரண்டு இறக்கைகள்'' என்று ஆயிஷா (ரலி) பதில் கூறினார்கள். "குதிரைக்கு இரண்டு இறக்கைகளா?'' என்று நபியவர்கள் கேட்டார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "சுலைமான் நபிக்கு குதிரை இருந்ததாகவும் அதற்கு இறக்கைகள் இருந்ததாகவும் நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?'' என்று கேட்டார்கள். உடனே நபியவர்கள் தம்முடைய கடைவாய்ப் பற்கள் தெரியுமளவிற்குச் சிரித்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அபூதாவூத் 4284
நபியவர்களின் வீட்டிலேயே அலமாரியில் குழந்தைகள் விளையாடும் உருவப் பொம்மைகள் இருந்துள்ளன. நபியவர்கள் அதனைக் கண்டிக்கவில்லை. எனவே நம்முடைய வீடுகளில் குழந்தைகள் விளையாடும் விளையாட்டுப் பொம்மைகளை வைத்திருப்பதில் தவறு கிடையாது.
மேற்கண்ட மார்க்க நெறிமுறைகளைத் தெரிந்து நம்முடைய இல்லங்களை முன்மாதிரி முஸ்லிம் இல்லங்களாக மாற்றி மறுமையில் சுவன வீட்டை அடைவோமாக.
abdunnasirmisc.blogspot.com

0 கருத்துகள்: