கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோரிக்கையை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி, இல்லையேல் 10 தொகுதிகளில் தனித்து போட்டி – மாநில செயற்குழுவில் தீர்மானம்.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி தலைமையில் 22.12.2013 அன்று சென்னையில் உள்ள மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.


இச்செயற்குழு கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் பி. அப்துல் ஹமீது, நிஜாம் முஹைதீன், மாநில பொருளாளர் ஏ.அம்ஜத் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் எஸ்.எம். ரபீக் அகமது அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர்கள் செய்யது அலி, அமீர் ஹம்சா, அப்துல் சத்தார், ரத்தினம் ,அபுதாகிர் உட்பட மாநில செயற்குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொணடனர்.

கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அரசியல் சூழல் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்:-

1. வரும் நாடாளுமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோரிக்கையை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்றும், இல்லையேல் ஏற்கனவே திட்டமிட்டபடி 10 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

2. தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு 3.5% என்பதில் இருந்து 7% சதவிகிதமாக உயர்த்திட இச்செயற்குழு மாநில அரசை வலியுறுத்துகிறது. கடந்த தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கிட வாக்குறுதியளித்ததை இச்செயற்குழு சுட்டிக்காட்டுகிறது.

3. நாட்டில் அதிகரித்துவரும் ஊழலை கட்டுப்படுத்தும் விதத்தில் நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்த “லோக்பால் மசோதா” நிறைவேற்றப்பட்டதை இச்செயற்குழு வரவேற்கிறது.
அதே வேளையில் மாநில அளவில் “லோக் ஆயுக்தா” வை அமைத்திட விரைந்து நடவடிக்கை எடுக்க மாநில அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

4. இந்திய தூதரக பெண் அதிகாரி தேவயானி கோப்ராகடே‘ வை அவமானப்படுத்திய அமெரிக்காவின் செயல்பாடுகளை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. தொடந்து இந்திய தலைவர்களையும், அதிகாரிகளையும் அவமானப்படுத்தி வரும் அமெரிக்காவிற்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

5. வரும் நாடாளுமன்ற தேர்தலில், தமிழக மக்களால் தொடந்து புறக்கணிக்கப்பட்டு வரும் பா.ஜ.க வோடு மற்ற கட்சிகளை கூட்டணி அமைக்க தரகு வேலைகளில் ஈடுபடுபவர்களை இச்செயற்குழு கண்டிப்பதோடு, மதவாத பாரதிய ஜனதாவை தனிமைப்படுத்திட மதச்சார்பின்மையின் மீது நம்பிக்கையுள்ள அனைத்து கட்சிகளும் முன்வர வேண்டும் எனவும், பா.ஜ.க வோடு கூட்டணி சேரும் கட்சிகளை பொதுமக்கள் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

6. ‘ஒருபால் உறவு‘ சம்பந்தமாக உச்சநீதின்மன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பை இச்செயற்குழு வரவேற்கிறது. இந்த கலாச்சார சீர்கேட்டை அதிகரித்திடும் வகையில் செயல்படும் மத்திய அரசை இச்செயற்குழு கண்டிப்பதோடு, இத்தீர்ப்பிற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறது.

7. கட்சி வளர்ச்சி மற்றும் தேர்தல் நிதியினை வசூல்செய்திட தீர்மானிக்கப்பட்டது. கட்சி தொண்டர்கள் தீவிரமாக பணியாற்றிடவும், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கிடவும் இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

0 கருத்துகள்: