கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

நேர்வழி

நேர்வழியில்லை. திறமையில்லை. பூரணத்துவமில்லை. தெரிந்து கொள்ளவேண்டியது நிறைய இருக்கின்றது. திருத்திக் கொள்ளவேண்டியுமுள்ளது. ஒருவர் உணர்ந்தால் அவருக்கு அல்லாஹ் உதவிபுரிவான். உலகம் முழுவதிலுமுள்ள கோடிக்கணக்கானோர் இது போன்ற துஆவோடு பயணிக்கின்றர். அந்த வழியில் செல்லுங்களெனவே அல்லாஹ்வும் கூறுகிறான்.

கருத்து, கொள்கையைக் கெடுப்பதற்கு துன்யாவில் நிரம்பபேர் உள்ளனர். கெட்டவர்களைக் காட்டப்போறேன் அல்லாஹ் அறிவிக்கிறான். மூன்று பண்புகள் உள்ளோர்.

1. புலம்பல்காரர்கள் 2. வயிற்றெரிச்சல் படுவோர் 3. பழிபோடுவோர்
புலம்பல் ; ‘‘எவ்வளவோ முயற்சி செஞ்சேங்க கிடைக்காம போயிருச்சு’’. ‘‘நான்தாங்க வாங்கலாமுன்னு இருந்தேன் கொஞ்சம் மிஸ் ஆயிடுச்சு அந்தாளு தட்டிக்கிட்டு போயிட்டான்.’’ ‘‘எத தொட்டாலும் தரித்திரமா இருக்குங்க’’ ‘‘அல்லாஹ் என்னைய ரொம்பவே சோதிக்கிறான்.’’ ‘‘குடும்பத்துல நிம்மதியில்லைங்க’’ ‘‘எப்படியிருக்கீங்க’’? ‘‘என்னமோ வண்டி ஓடுதுங்க’’ ‘‘அல்ஹம்துலில்லாஹ்’’ கூறாதவர்கள் வாழ்க்கை முழுவதும் எதையாவது கூறி நெகட்டிவ் ஆகவே பேசித்திரிபவர்கள் புலம்பல்காரர்கள்.

வயிற்றெரிச்சல் ; ‘‘யாரையாவது பார்த்து வயிற்றெரிச்சல் படுவது’’. ‘‘அவ ரொம்பத்தான் பீத்திக்கிர்றா தன்னோட பிள்ளை படிச்சு பெரிய வேலை வாங்கிடுச்சுன்னு.’’ ‘‘பக்கத்து வீட்டுக்காரு எப்படியோ சம்பாதிச்சு கார், பங்களான்னு வாங்கிட்டாருங்க. அவரு பொண்டாட்டி நகை நட்டுன்னு மாட்டிட்டு அலையறா’’ ‘‘இவளோ பெரிய வீடு எப்படி கட்டியிருப்பாங்க? எங்கிருந்து காசு கெடச்சுது’’. ‘‘நம காலம்பூறா சைக்கிளில் போறோம். நேற்று வந்தபயல் கார்ல பேறானே.’’ அவன் கெட்ட கேட்டுக்கு ஏ/சி வச்சுருக்கான்.’’ வாழ்க்கை பயணம் முழுவதும் எதன்மீதாவது எவர் மீதாவது வயிற்றெரிச்சல் படுவோர்.

பழிபோடுதல் ; ‘‘அவரு சரியில்லீங்க’’. ‘‘அவரு மட்டும் அப்படிச் செய்யலைன்ன இந்தப் பிரச்சினையே வந்திருக்காதுங்க’’ ‘‘அந்த மனுசர் தாங்க எல்லாத்துக்கும் காரணம்’’. ‘‘அந்த பொண்ணலாதான் குடும்பமே நாசமாயிடுச்சு’’. யார் மீதாவது பழி போட்டு தான் மட்டும் தப்பி ஓடுவது. சஹாபாக்கள் மற்றவர்களது பழியை தன் மீது சுமத்திக் கொண்டார்கள். நாம் மற்றவர்கள் மீது சுமத்துகிறோம்.

சத்திய உணர்வு, நேர்மை, வேதவிளக்கம் குறைவாகப் பெற்றுள்ளோம். நிறைய பெறவேண்டியுள்ளது. நல்லவைகளைத் தெரிந்து கொள்ள பயணிப்பேன். நல்லதையே சிந்திப்பேன். உணர்வு ஒவ்வொருவருக்கும் வேண்டும். கால்வீங்குமளவு தொழுதார்கள் ரசூலுல்லாஹ். பாவங்கள் தான் அல்லாஹ் மன்னித்து விட்டானே பிறகு ஏன் கால்வீங்குமளவு தொழனும்? கேட்டார்கள் ஆயிஷா (ரலி) அல்லாஹ் மன்னித்தானே அந்த நன்றிக்காக தொழவேண்டாமோ கூறினார்கள். நல்லதை நோக்கிய பயணத்தில் நபி (ஸல்) திருப்தியடையவில்லை. மீண்டும், மீண்டும் திருப்தி நாடி பயணித்தார்கள். அது போன்ற பயணத்தை உம்மத்துகளும் கைக்கொள்ளவேண்டும்.

தெளிவு, எச்சரிக்கை, விழிப்புணர்வுடன் ‘‘ஸிராத்தல் முஸ்தகீம்’’ & நேர்வழி நோக்கி ஒவ்வொரு அடியும் முன்வைக்கவேண்டும். நேர்வழி என்ற ஒரு சொல்லுக்குள் ஓராயிரம் கருத்துக்கள் உட்புதைந்துள்ளான் அல்லாஹ்.
& ஜெ. ஜஹாங்கீர்
முஸ்லிம் முரசு செப்டம்பர் 2012

0 கருத்துகள்: