கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

இட ஒதுக்கீடு: தமிழகம் முழுவதும் தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம்!

சென்னை: மத்திய, மாநில அரசுகளிடம் இட ஒதுக்கீட்டை உயர்த்தித் தரக் கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் முஸ்லீம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரியும், தமிழகத்தில் உள்ள முஸ்லீம்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை உயர்த்த கோரியும் லட்சகணக்கான முஸ்லீம்களை ஒன்று திரட்டி தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவித்திருந்தது. அதன்படி சென்னை, கோவை, நெல்லை, திருச்சி ஆகிய இடங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோவை காந்திபுரத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினர். கூட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் கண்டன உரையாற்றினார்.
அப்போது அவர், ''தமிழகத்தில் முஸ்லீம்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீடு போதுமானதல்ல என்றும் அதை அதிகரித்துத் தருவோம் என்று ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். ஆனால், இரண்டரை ஆண்டு காலமாகியும் இன்னும் அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
அதேபோல், இந்திய அளவில் முஸ்லீம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்தாமல் காங்கிரஸ் அரசு ஏமாற்றி வருகிறது.

உடனடியாக இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் நாடாளுமன்றம், சட்டமன்றத்தை முற்றுகையிட்டு அதன் செயல்பாட்டை முற்றிலுமாக முடக்குவோம்" என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி, தர்மபுரி, திண்டுக்கல் மற்றும் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் உட்பட 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை
இதேப்போன்று சென்னையிலும் ராஜரத்னம் ஸ்டேடியம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர்.
நெல்லை
நெல்லை, வண்ணாரப்பேட்டை தெற்குப் புறவழிச்சாலையில் ஜமாத்அத் சிறை நிரப்பும் போராட்டம் நடந்தது. இதற்கு ஜமாத்அத் மாநில மேலாண்மை குழு தலைவர் எம்.எஸ்.சுலைமான் தலைமை வகித்தார். இந்த போராட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், தேனி மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த ஜமாஅத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போலீசார் விரைவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். டி.ஐ.ஜி. சுமித்சரன் தலைமையில் 4 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பேருந்துகள் மாற்று சாலைகள் மூலமாக செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனால் பல்லாயிரக்கணக்கான ஜமாத்அத் உறுப்பினர்கள் திரண்டு வந்து போராட்டத்தில் கலந்து கொண்ட போதிலும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படவில்லை.

திருச்சி

திருச்சியில் ஜி.கார்னர் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை, நாகப்பட்டினம், பெரம்பலூர், சிவகங்கை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட  மாவட்டங்களில் இருந்து 60 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் ஆண்களுக்கு சமமான அளவு பெண்கள் கலந்துகொண்டனர். பல பெண்கள் கைகுழந்தையோடு கொழுத்தும் வெயிலில்  நின்று கொண்டு  கோஷங்கள் எழுப்பினர்.  கூட்டத்தில் வந்திருந்த  பச்சிளம் குழந்தைகளுக்கு 100 லிட்டர் பால் வழங்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில், இட ஒதுக்கீடு எங்களுக்கு வழங்கினால் நாங்கள் அரபு நாடுகளில் ஆடு மாடு மேய்க்க தேவையில்லை. தமிழகத்தின் முதல்வரே ஆணையம் போட அவசியமில்லை. ஆட்சியில் நீங்கள் இருப்பதால் ஆணை மட்டும் பேதுமே.. தமிழகத்தின் முதல்வரே ஆட்சிக்கு வந்தால் உயர்த்தி தருவோம் என்றீரே, மாதம் முப்பது போன பின்னும் மூச்சு பேச்சு இல்லையே, நியாயம்தானா நியாயம் தானா இஸ்லாமியர்களை வஞ்சிப்பது நியாயம்தானா.. ஏமாற மாட்டோம் ஏமாற மாட்டோம் இனியும் நாங்கள் ஏமாறமாட்டோம். இட ஒதுக்கீடு ஒன்றை தவிர வேறு எதையும் ஏற்க மாட்டோம். அதேபோல்  காங்கிரசே, 2009  தேர்தலில் இடஒதுக்கீடு தருவோம் என அறிவித்தாயே, 2009ல் அறிவித்தாயே. பத்தாண்டுகள் ஓடிப்போச்சு, இட ஒதுக்கீடு என்ன ஆச்சு.. என அ.தி.மு.க, காங்கிரஸ் என ஆளும் கட்சிக்கெதிராக அவர்கள் எழுப்பிய கோஷங்கள் விண்ணை பிளந்தது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் திருச்சி மாவட்ட தலைவர் நஸீர் அஹமது தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாதின் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி, மாவட்ட தலைவர்  சிராஜுதின்  ஆகியோர் கலந்துகொண்டனர். தலைமை தாங்கியதோடு கண்டன உரையாற்றினார்.

கூட்டத்தில் பேசியவர்கள், "முதல்வர் ஜெயலலிதா கடந்த சட்டமன்ற தேர்தலில் இஸ்லாமியர்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டை உயர்த்தி தருவதாக வாக்குறுதி கொடுத்தார். ஆனால்  ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும் எங்கள் இட ஒதுக்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அதேபோல், இந்திய அளவில் இஸ்லாமியர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரை செய்தார். அந்த  பரிந்துரை நடைமுறைப்படுத்தாமல் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு  இழுத்தடித்து வருகிறது. மத்தியில் ஆளும் காங்கிரஸ் உடனடியாக இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால்  நிச்சயமாக எங்கள் வாக்குகள் அப்படியே சிந்தாமல் சிதறாமல்  உங்களுக்குப் போடுவோம். இல்லாவிட்டால்  எங்கள் ஓட்டு எங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குபவர்களுக்கு மட்டுமே. இது  நிச்சயம் என்று முழங்கினர்.

0 கருத்துகள்: