கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை ஏழு சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும், எஸ்.டி.பி.ஐ கட்சி கோரிக்கை!

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு;

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. சுதந்திரத்திற்கு பின்னர் இட ஒதுக்கீடு முறை அகற்றப்பட்டதன் காரணமாக இந்திய அளவிலும், தமிழக அளவிலும் இஸ்லாமியர்களின் வாழ்க்கை கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி உள்ளது. இதனை பல்வேறு ஆனையங்களும் புள்ளி விபரங்களுடன் தெரிவிதுள்ளன.

இட ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு அமைப்புகளின் தொடர் முயற்சியால், போராட்டங்களால் கடந்த 2007 ல் தமிழகத்தில் 3.5 சதவிகிதம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள முஸ்லிம்களின் மக்கள் தொகை எண்ணிக்கை மற்றும் அவர்களின் வாழ்வாதார நிலையை கணக்கிடும் பொழுது 3.5% இட ஒதுக்கீடு என்பது மிகவும் குறைவானதாகும். எஸ்.டி.பி.ஐ கட்சி தமிழகத்தில் கடந்த மாதங்களில் பத்து மாவட்டங்களில் இட ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி மாநாடுகளை நடத்தியது. தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறது. மேலும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் தொடர்ந்து இக்கோரிக்கையை வலியுறுத்தி போராடி வருகின்றன. தமிழக முதல்வர் 2011 ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரித்து வழங்கிடுவோம் என உறுதியளித்ததின் பேரில் இஸ்லாமிய மக்கள் அ.தி.மு.க விற்கு பெருவாரியாக வாக்களித்தனர் என்பதையும் கவனத்தில் கொண்டு ஒட்டுமொத்த முஸ்லிம்களின் இக்கோரிக்கயை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் நியாயமான இட ஒதுக்கீடு கோரிக்கைக்காக நடத்தப்படும் அனைத்து போராட்டங்களையும் யார் நடத்தினாலும் எஸ்.டி.பி.ஐ கட்சி ஆதரிக்கிறது. தமிழக அரசு ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கான இட ஒதுக்கீடு என கருதாமல் சமூக நீதியை தமிழகத்தில் நிலைநாட்டிட காலதாமதமின்றி தற்போது முஸ்லிம்களுக்கு வழங்பட்டு வரும் 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டை 7 சதவிகிதமாக உயர்த்தி வழங்கிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு விரிவான கோரிக்கை கடிதம் ஒன்றும் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: