கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

கன்னத்தில் முத்தமிட்டால்........... -

வாப்பா....... வாப்பா.............

”என்னம்மா?”
”வாப்பா... சாயங்காலம் சீக்க்ரம் வந்திருங்க, சரியா ஆறு மணிக்கெல்லாம் நிகழ்ச்சி ஆரம்பிச்சிருவாங்க, கலெக்டர் தான் சீப் கெஸ்ட். நான் பேச ஆரம்பிக்கையில் நீங்க இருக்கணும் சரியா........... "  சொல்லிக்கொண்டே கல்லூரிப் பேருந்தைப் பிடிக்கப் பறந்தாள் ஆயிஷா.


"சரிம்மா, அம்மாவோடு வந்திடறேன் இன்ஷா அல்லாஹ்" சிரித்துக்கொண்டே பதிலுரைத்தார் வாப்பா.

"சிரிக்காதீங்க, என்ன தான் இருந்தாலும் ஒரு முஸ்லிம் பொண்ணு பேசிற தலைப்பையா தேர்ந்தெடுத்திருக்கிறாள்; முத்தமாம் முத்தம், எனக்கு வர இஷ்டமில்லை....." கோபத்துடன் சமையலறைக்குப் போனாள் அம்மா.

ஆயிஷா, மருத்துவக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி. கல்லூரியின் இலக்கியப் பேரவை சார்பில் நடத்தப்படும் விழாவுக்கு கலக்டர் அழைக்கப்பட்டிருக்கிறார். விழாவில் மாணவர்களின் பேச்சுப் போட்டியும், தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பரிசும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆயிஷா தேர்ந்தெடுத்துள்ள தலைப்பு 'முத்தம்'. அதனால் தான் இத்தனை யுத்தம்.

" இதற்காகவா ரெண்டு நாளா குறிப்பெடுத்திங்க வாப்பாவும் மகளும்..... சரியில்லைங்க....."  அம்மா மீண்டும் குமுறினாள் சிற்றுண்டியை மேசையில் வைக்கும் போது.

" சரி விடு, நீ அவ கூடரெண்டு நாளா சண்டை போட்ட,  அதுதான் உனக்கு சஸ்பென்ஸ்ன்னு சொல்லியிருக்காள்...... , வந்து கேட்டுப்பாரு"

 "அஞ்சு மணிக்கு வர்றேன், ரெடியா இரு."  சிற்றுண்டி முடித்து அலுவலகத்திற்கு கிளம்பினார்.

கல்லூரியிலும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. 'ஆயிஷா என்ன பேசப்போகிறாள்?'
எல்லோரும் கேட்டுக்கொண்ட கேள்வி இதுதான்.

மணி 6:15  ஆகிவிட்டது, வாப்பாவை காணவில்லையே என்ற வருத்ததோடு வாசலை நோட்டமிட்டுக்கொண்டிருந்த ஆயிஷாவை பேச அழைத்தார் தொகுப்பாளர்.

கல்லூரி வாயிலைஅடையும் நேரம், ஆயிஷாவை தொகுப்பாளர் அழைக்கும் சப்தம் கேட்டு விரைவாக உள்ளே நுழைந்தனர் வாப்பாவும் அம்மாவும்.

மேடையில் உள்ளோரையும், வந்திருந்தவர்களையும் வரவேற்று பேசி முன்னுரையினை முடிக்கும் நேரம், பெற்றோரைப் பார்த்த சந்தோசத்தில் பேச்சைத் தொடரந்துகொண்டிருந்தாள் ஆயிஷா.
".......... முத்தத்தினால், தனக்கு கிடைக்க வேண்டிய கவர்னர் பதவியினை ஒருவர் இழந்து விட்டார்,  அப்படி பதவி மறுக்கப்பட்டவருக்கோ ஒன்றும் புரியவில்லை. நான் ஒன்றும் குற்றம்  புரியவில்லையே, முத்தம் கொடுப்பதில்லை என்று தானே சொன்னேன், இதற்கும் என்னுடைய பதவிக்கும் என்ன தொடர்பு? அந்த மனிதருக்குள் ஆயிரம் கேள்விகள் ஓடிக்கொண்டிருந்தது. "


    "அன்பர்களே, உங்களுக்கும் கூட இந்த ஐயம் எழலாம், இன்னும், இது எந்த மாநிலத்தில் நடந்தது? என்றும் கூட கேட்கத் தோன்றும். பதவி இழப்பு இன்று ஒருவேளை நடந்திருந்தால் முத்தம் கொடுத்ததற்காக வேண்டுமானால் நேர்ந்திருக்கும்."

    அவையில் ஒரே சிரிப்பொலி; அம்மாவுக்கோ மகள் அரசியல் பேசுகிறாளே என்ற வியப்பு!

    நண்பர்களே! விஷயத்திற்கு வருகிறேன்,  நான் சொன்ன அந்த நிகழ்ச்சி ஏறத்தாழ ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் நடந்தது. உமர் பின் கத்தாப் (ரழி) என்ற நபித் தோழர் 'கலீபா' வாக ஆட்சி புரிந்த நேரம், அந்த மனிதர் ஆளுனராக பதவியமர்த்த அழைக்கப்பட்டிருந்தார். அந்த நேரம் கலீபாவுக்கும் ஆளுநராக பதவியேற்க வந்திருந்தவருக்கும் நடந்த உரையாடலின் இடையே, "......நானெல்லாம் என் குழந்தைகளை கொஞ்சுவதா? முத்தமிடுவதா?? அப்படி எதுவுமே செய்தது கிடையாது" என்று அது ஏதோ குற்றமான செயல் போல சொன்ன மாத்திரத்திலேயே, கலீபா உமர் பின் கத்தாப் (ரழி) அவர்கள், அந்த நபருக்கு தரவிருந்த பதவியினை ரத்து செய்து உத்தரவிட்டார்கள்.
    குழம்பிப்போய் இருந்த அந்த நபரிடம் சொன்னார்கள், "உனது மனம் உன் குழந்தைகளிடமே இரக்கம் காட்டவில்லை கருணைகாட்டவில்லையெனில், பிறகு நீர் எப்படி மற்ற மனிதர்களிடம் கருணையுடன் நடந்துகொள்வீர்? இறைவன் மீது ஆணையாக உம்மை ஒருபோதும் ஆளுனர் ஆக்கமாட்டேன்" என்று கூறி திருப்பி அனுப்பினார்கள்.

    அவை மிகுந்த அமைதியுடன் காணப்பட்டது, ஆயிஷா அடுத்ததாக தொடர்ந்தாள்.

    முத்தத்திற்கும் கருணைக்கும் தொடர்பா?  ஆம் நண்பர்களே, அண்மையில் ஒரு அறிவியல் செய்தியினைப் படிக்க நேர்ந்தது. நாம் நம் குழந்தைகளைக் கொஞ்சி அரவணைத்து முத்தமிட்டு மகிழ்வது நாம் அவர்கள் மீது வைத்திருக்கும் அன்பு மற்றும் பாசம் காரணமாக என்று நினைத்திருக்கிறோம், ஆனால் அது அவற்றையும் மீறி இதயத்தின்பால் ஊறுகின்ற கருணையின் காரணமாக என்றறியும் போது வியப்பை அளிக்கிறது,

    பெற்றோர் குழந்தையினை முத்தமிடுவத்தின் மூலம் அந்தக் குழந்தை ஓர் உணர்வு ரீதியான அரவணைப்பைப் பெறுகிறது. அதுவும் ஒரு தாய் முத்தமிடும் போது குழந்தையுடனான பாசப்பிணைப்பு உயிரியல் மூலம் உறுதிசெய்யப்படுகிறது, பெற்றோரின் இந்த ஆத்மார்த்தமான முத்தத்தினால், எந்த ஒரு எதிர்மறையான சூழ்நிலையிலும் தாழ்வுமனநிலை என்பது குழந்தையின் உள்ளத்தினைப் பாதிக்காது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது,

    மேலும், குழந்தையினை முத்தமிடுவதால் குழந்தைக்கும் அதேவேளையில் பெற்றோருக்கும் மகிழ்ச்சியான ஒரு மனநிலையினை அடையமுடிகிறது,
    குழந்தையின் இதயம் சீராக செயலாற்ற பெரிதும் உதவுகிறது.

    தாய் தன் குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டால் என்ன நடக்கிறதென்பதை நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மையை உங்களுக்கு சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.  ஒரு தாய் தன் குழந்தையினை கருவில் சுமக்கும் போது அதற்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திக்கான தேவைகளை ஈடுசெய்கிறாள். ஆனால் குழந்தை பிறந்த பிறகு வெளி உலகில் குழந்தையினைத் தாக்கும் நோய்க்கு எதிர்சக்திகளை உருவாக்குவதில் முத்தம் பெறும் பங்கு வகிக்கிறது. ஆச்யர்யமாக இருக்கிறதல்லவா?? ஆம், ஒரு தாய் முத்தமிடுவதன் மூலம் கிருமிகளின் மாதிரி எடுக்கப்பட்டு வெளித் திசுக்கள் மற்றும்,   நினைவுத்திறன் 'பி' வகை செல்கள் மூலம் அந்த கிருமிகளின் வீரியம் அழிக்கப்பட்டு, இதற்கான நோய் எதிர்ப்பு சக்திகள் உருவாக்கப்பட்டு அவை 'பி'வகை செல்களினால் நினைவுத்திறன் கொண்டு தாய்ப்பால் மூலம் குழந்தைக்குப் போய்ச்சேருகிறது.
    குழந்தையும் நோய்க்கிருமிகளிலிருந்து பாதுகாப்பு பெறுகிறது.

    எனவே தான் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னரே, அறிவியல் அறிந்திராத காலத்தில் தோன்றிய எங்கள் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள், குழந்தைகளை முத்தமிடாத ஒரு கிராமவாசியைப் பார்த்து, "இறைவன் உமது இதயத்திலிருந்து அன்பை நீக்கியிருப்பதற்கு நான் பொறுப்பாளியா??" என்று கூறினார்கள்.

    "அன்பும் கருணையும் கலந்திருக்கும் முத்தத்தினைப்.........................."

    வார்த்தையினை முடிப்பதிற்குள் அரங்கில் கரவொலி நிரம்பியிருந்தது.
    அம்மா, ஆயிஷாவின் கன்னத்தில் முத்தமிட்டுக்கொண்டிருந்தாள்
ரபீக்

0 கருத்துகள்: