பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை அமெரிக்கா கமாண்டே படையினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுட்டுக்கொன்றனர்.
அமெரிக்க படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடனுக்காக சென்னை அண்ணாசாலையில் உள்ள மக்கா மஸ்ஜித் இஸ்லாமிய மையத்தில் விஷேச தொழுகை (ஜனாஷா) நேற்று பகல் 1.30 மணிக்கு நடைபெற்றது. இதில் இஸ்லாமியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த தொழுகைக்கு பிறகு மக்கா மஸ்ஜித் இஸ்லாமிய மையத்தின் நிர்வாகிகள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

நியாயமா?
அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்ப்பு சம்பவத்திற்கு பின்லேடன் தான் காரணம் என்று அமெரிக்கா கூறி வந்தது. ஆனால் அதற்கான ஆதாரத்தை அமெரிக்கா வெளியிடவில்லை. இப்போது ஒசாமாவை கொன்று கடலில் வீசியிருக்கிறார்கள். இஸ்லாமிய முறைப்படி அவரை அடக்கம் செய்யவில்லை.
அவர்கள் ஒசாமா பின்லேடனை நீதிக்கு முன்பு நிறுத்தியிருக்க வேண்டும். அதை விட்டு அவரை சுட்டுக்கொன்று இருப்பது எந்த விதத்தில் நியாயம்? அவர் அநாதை இல்லை. முஸ்லிம் சமுதாயத்தின் பங்கு. அவருக்காக இன்று `ஜனாஷா’ தொழுகையை நடத்தியிருக்கிறோம்.

பிரபாகரனுக்கு மட்டும் ஆதரவா?
நாங்கள் தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும் ஆதரிக்கவில்லை. ஒசாமா பின்லேடன் மீதான குற்றத்தை அமெரிக்கா நிரூபிக்கவில்லை. உண்மையிலேயே அமெரிக்கா தான் பயங்கரவாத நாடு.
இந்தியாவால் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த, மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பிரபாகரனுக்காக தமிழ்நாட்டில் இரங்கல் தெரிவித்து கூட்டம் நடத்தினார்கள். தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும்போது, நாங்கள் தொழுகை நடத்தினால் என்ன தவறு?
குழந்தைகளுக்கு பெயர்
நாங்கள் எங்கள் பள்ளிவாசலுக்குள்ளே தான் செயல்படுகிறோம். வெளியில் ஆர்ப்பாட்டம் எதுவும் நடத்தப்போவதில்லை. மறைந்த ஒசாமா பின்லேடனுக்காக தமிழகம் முழுவதும் மசூதிகளிலும், பள்ளிவாசல்களிலும் தொழுகை நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
தொழுகைக்கு முன்பாக ஒசாமா பின்லேடனுக்கு ஆதரவாக பேசிய இஸ்லாமியர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஒசாமா பின்லேடன் பெயரை சூட்ட இருப்பதாக தெரிவித்தனர்.
பள்ளிவாசலை சுற்றி சில இடங்களில் ஒசாமா பின்லேடனுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக