கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

சத்தியம் தெளிவானதே!


கோவை அப்துல் அஜீஸ் பாகவி
இஃதிகாபினுடைய ஒரு இரவில் ஒரு இளைஞர், பர்தா விஷயத்தில் இஸ்லாத்தில் ஏன் இத்தனை குழப்பம்? என்று கேட்டார். சுடிதாரே பர்தா ஆகிவிடும் என்று ஒருவர் சொல்கிறார். முகத்தை மறைக்கத் தேவையில்லை என்று ஒருவர் சொல்கிறார். கண்கள் மட்டும் வெளியே தெரிகிற மாதிரியான பர்தாவுக்கு இஸ்லாத்திற்கும் தொடர்பில்லை என்று ஒருவர் சொல்கிறார். இத்தனை குழப்பம் ஏன்? என்று அவர்கேட்டார்.


அவர் கேட்ட இந்த விஷயத்தில் மட்டுமல்ல இது போலவே வட்டி, சிலவகை போதைப் பொருட்கள், சில வியாபார வழிமுறைகள் தொடர்பாகவும் இது போன்ற கேள்விகள் அடிக்கடி கேட்கப்படுகிறது. இது போன்ற சில விஷயங்களில் இஸ்லாத்தின் கருத்து தெளிவாக இல்லை என்றும் அல்லது அறிஞர்களால் திட்டமிட்டு திசைதிருப்பப் பட்டுள்ளது என்றும் பேசப்படுகிறது.

மார்க்கத்தின் சட்டங்களும் கோட்பாடுகளும் தெளிவாகத்தான் இருக்கின்றன. குழப்பமோ சந்தேகமோ தெளிவின்மையோ அவற்றில் இல்லை. அப்படி குழப்பம் இருப்பது போல தோன்றுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. 1. சுயநலம். 2. முறைப்படி போதிய அளவு அறியாமல் இருப்பது. மார்க்கம் என்ன சொல்கிறதோ அதை முதலில் தெரிந்து கொள்வோம் என்ற எண்ணமில்லாமல், இப்படித்தான் மார்க்கம் சொல்லியிருக்கும் என்று தன்னிஷ்டத்திறகு முடிவு செய்து கொண்டு மார்க்கச் சட்டங்களை அணுகுகிற போது நடை முறையில் இருக்கிற ஒரு மார்க்க சட்டம் குழப்பமாக இருப்பது போல தோன்றும்.

சமயத்திற்கு தொடர்பில்லாத இயக்கங்கள் அல்லது தத்துவங்களின் சார்பு மனப்பான்மையில் இஸ்லாமிய சட்டங்களை அணுகுகிற போதும் குழப்பம் உருவாகிறது. சமய அக்கறை இல்லாதவர்கள் சமுதாயத்தை பற்றி அக்கறைப்படுவதாக காட்டிக் கொள்வதனாலும் குழப்பம் ஏற்படுகிறது. இது போல தன்னுடைய லாபத்திற்காக வாதிடுவோர்களாலும் குழப்பம் ஏற்படுத்தப்படுகிறது. இவை அனைத்தும் சுயநலத்தினால் ஏற்படுகிற குழப்பங்களே தவிர இஸ்லாமிய சட்டங்களில் உள்ள குழப்பங்கள் அல்ல.

பண வசதி அல்லது செல்வாக்கு, சில போதுகளில் மைக் அல்லது பத்திரிகை வாய்ப்பு தங்களிடம் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக தங்களுக்கு மார்க்கத்தில் கருத்துச் சொல்ல அதிகாரம் இருக்கிறது என்று சிலர் கருதுவதும் இத்தைகய சுயநல குழப்பங்கள் ஏற்படுகின்றன.
இன்றைய முஸ்லிம் சமுதாயத்தில் சில கல்வியாளர்களும், தரையில் கால் பாவாமல் நடக்கிற (முன்பின்) நவீனத்துவ போதைப் பேர்வழிகளும், கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பவை வழக்கமாகக் கொண்ட போலிப் புரட்சியாளர்களும் மார்க்கச் சட்டங்கள் தெளிவாக சொல்லப்படவில்லை அல்லது திசை திருப்பப்பட்டள்ளது என்று பேசினால் அவை அனைத்துக்கும் சுயநலமே காரணம்.
அப்பாவி மக்கள் சிலரும் சட்டங்களைப்பற்றி முறையாக தெரிந்து கொள்ளாமல் இத்தைகய கருத்துக்களை பேசுவதுண்டு. இவர்களிடத்திலே இருக்கிற பிரச்சினை என்ன எனறால் சட்டங்களை முறையாக விளங்கிக் கொள்ள முயற்சி செய்யமால் இருந்து விட்டு, ஏன் குழப்பததை ஏற்படுத்துகிறீர்கள் என்ற கேள்விகளை மட்டும் கேட்டுக் கொண்டிருப்பார்கள். அந்த கேள்வியை கூட குழப்பம் செய்பவரிடத்தில் கேட்காமல் எதிர் தரப்பில் கேட்பார்கள்.
உதாரணத்திற்கு தொப்பி விஷயம் ஒரு பெரிய சர்ச்சைக்குரிய விஷயமா? இதை வைத்து சமுதாயத்தை பிளக்களாமா என்ற கேள்வியை தொப்பி போட்டுக் கொண்டே பிளவை ஏற்படுத்தியவரிடத்தில் கேட்காமல் சும்மா இருக்கிற அப்பாவிகைளப் பார்த்துக் கேட்பார்கள். அவர்களை சாடுவார்கள். அவர்கள் தான் பிரச்சினைக்கு காரணமானவாட்கள் எனப்து போல பேசுவார்கள். இப்படி நடந்து கொள்வதன் மூலம் குழப்பத்தை உண்டு பண்ணியவரை புரட்சியாளனின் அந்தஸ்த்திற்கு உயாத்திவிடுவார்கள். இத்தயை இரண்டு சூழ்நிலையில் இருப்பவர்கள்தான் அவ்வப்போது மார்க்க சட்டங்களை தெளிவற்றவை என்று பேசுகிறார்கள். மார்க்க அறிஞர்கள் குழப்புவதாக திசை திருப்புவதாக கோஷமிடுகிறார்கள்.
இந்த சூழலில் திருக்குர்ஆனின் 256 வசனம் சிறந்த வழிகாட்டுதலை தரக்கூடியது. ''ஆயத்துல் குர்ஸீ'' எனப்படும் வசனத்திற்கு ஆடுத்த வசனம் அது. ஆயத்துல் குர்ஸீ வசனம் பெரும்பாலான முஸ்லிம்களுக்கு மனப்பாடமாக இருக்கும். இறையச்சத்தை வளர்த்துக் கொள்வதற்கும், பிற சக்திகளைப்பற்றி அச்சம் தவிர்ப்பதற்கும், நோய் நிவாரணத்திற்காகவும் வேறு பல காரணங்களுக்காகவும் ''ஆயத்துல் குர்ஸீ'' பயன்படுத்தப்படுகிறது. அந்த வசனம் எந்த அளவு கவனத்திற்குரியதோ அது போன்றே அதற்கடுத்த வசனமும் கவனத்திற்குரியது. ''ஆயத்துல் குர்ஸீ'' அதனுடைய ஆத்மார்த்த பலன்களின் காரணமாக முக்கியத்துவம் பெறுகிறது என்றால் இவ்வசனம் அதன் வழிகாட்டுதலுக்கே அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
திருக்குர்ஆனின் 256 வது வசனத்தில் ''நிச்சயமாக வழிகேட்டிலிருநது நேர்வழி தெளிவாகிவிட்டது என இறைவன் கூறுகின்றான். ஆதாவது எது நேர்வழி எது வழிகேடு என்பது தெளிவாக சொல்லப்பட்டு விட்டது. எது அனுமதிக்கப்பட்டது எது அனுமதிக்கப்படாதது என்பது அடையாளம் காணப்பட்டு விட்டது. எது சரி எது தவறு என்பதில் இனி குழப்பத்திற்கு இடமில்லை என்பது இதன் பொருள். ''கத்தபய்யனர் ருஷ்து மினல் கைய்யி'' என்ற இந்த சிறு வாக்கியம் இறுதி மூச்சு வரை நல்ல முஸ்லிமாக வாழ்ந்துவிட வேண்டும் என்று ஆசைப்படகிற எவரும் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டிய வசனமாகும்.
அதிலும் குறிப்பாக மார்க்கத்தை பற்றியும் மார்க்கம் சார்ந்த விஷயங்களைப் பற்றியும் பேசவே விளங்கிக் கொள்ளவோ அல்லது கருத்துச் சொல்லவோ தலைப்படுகிற எந்தக் கட்டத்திலும் மறந்துவிடக் கூடாத கருத்து இது. மார்க்கம் விஷயத்தில் தவறான மயக்கங்களும் சிந்தனைகளும் ஆட்படாமல் இருப்பதற்கு இந்த வசனம் உதவும். பல்வேறு பட்ட தடுமாற்றங்களுக்கும் வழிதிருப்புதலுக்கும் முஸ்லிம் சமுதாயம் உள்ளாகியிருப்பதற்கு இந்த வசனத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ளத் தவறியதே காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.
இந்த வசனத்தின் கருத்தை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்திய விதம் மிகச்சிறப்பானது. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள சொன்னார்கள். ஹலால் எது என்பது தெளிவு. ஹராம் எது என்பது தெளிவு. இவை இரண்டுக்கும் இடையே சந்தேகத்திற்குரிய சில விஷயங்கள் உண்டு. அவற்றிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். அவற்றின் அருகே செல்லாதீர்கள். கிணற்றின் விளிம்பில் அமர்ந்திருப்பவன் அதற்குள் விழுந்து விடுகிற ஆபத்து உண்டு என்று கூறினார்கள்.
மிக அருமையாக சொல்லப்பட்ட இந்த அறிவுரை என்றும் நமது கவனத்திற்குரியது. நம்மை எச்சரிக்கை செய்து நமது ஈமானையும் இஸ்லாமிய வாழ்வையும் பாதுகாக்கக் கூடியது. அனுமதிக்கப்பட்டவைகளும் அனுமதிக்கபடாதவைகளும் திட்டவட்டமாக தெளிவுபடுத்தப்பட்டபிறகு இந்த வட்டத்திற்குள் அது வருமா ? அல்லது அந்த வட்டத்தில் இது சேருமா என்ற மயக்கம் சில விஷயங்களில் ஏற்படுவது சகஜமே! தெருக்கோடியில் இருக்கிற கடையிலிருந்து ஒரு பிஸ்கெட் பாக்கெட் வாங்கிவா! என்று சொன்னால் ஓடிப்போய் வாங்கி வருகிற பையன் ஒரு சோப்புக்கட்டி வாங்கி வா என்று சொன்னால் கடை மூடியிருந்தால் என்ன செய்வது என்று கேள்வி கேட்பான். தனக்கு பயனுள்ளதை உடனே ஏற்றுக் கொள்வதும் தனக்கு நேரடிப் பயனில்லாததை அல்லது தனக்கு விருப்பமில்லாததை ஏற்கக் தயங்குவதம் மனித இயல்பு. அந்த இயல்பு இறைச்சட்டங்கள் விஷயத்தில் எப்படி வளைந்து கொடுக்கிறது என்பதில் தான் ஒரு வருடைய பக்தி பரிமளிக்கிறது.
இறைச்சட்டங்களுக்கு வளைந்து கொடுப்போம் என்று எண்ணுகிற எவரும் அவர் படித்தவராக இருந்தாலும் சரி பாமராக இருந்தாலும் சரி முதலில் அச்சட்டங்கள் குறித்து தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். இரண்டாவது தமது சொந்தக் கருததுக்கு ஏற்ப அச்சட்டங்களுக்கு விளக்கம் அளிக்க முயற்சிகக் கூடாது. மூன்றாவது தெளிவாக தெரிந்து கொள்வதற்கு முன்னால் சட்டங்கள் குpறத்து விவாதிக்கவோ கருத்துச சொல்லவோ முயலக்கூடாது. இந்த அடிப்படையான அளவுகோல்களை கவனத்தில் கொண்டுவிட்டால் மார்க்கச் சட்டங்களில் ஒரு போதும் குழப்பம் இருப்பது போலத் தோன்றாது.
சந்தேகங்களும் கேள்விகளும் வந்த வேகத்தில் விளக்கம் பெற்றுதிரும்பிவிடும். இதை புரிந்து கொள்வதற்கு சரியான உதாரணம் பர்தா குறித்த இஸ்லாத்தின் சட்டமாகும். பர்தா விஷயத்தில் இஸ்லாத்தின் தத்துவமும் வழிகாட்டுதலும் தெளிவானது. மார்க்கத்தின் முன்னோடிகள் இது விஷயத்தில் சில விவாதங்களை செய்தார்கள் என்ற போதும் சமுதாயம் குழம்பிக் கொள்ள தேவையில்லாத வகையில் தெளிவான முடிவை தந்துள்ளார்கள். இந்த விஷயங்களை தெளிவாக படித்துவிட்டால் சுடிதார் அணிந்தால் போதுமா? அல்லது தனியாக பர்தா தேவையா? அப்படியே பர்தா அணிந்தாலும் முகத்தை மறைக்க வேண்டுமா? வேண்டாமா? அலுவலகங்களிலும் மீடியாக்களிலும் பணி செய்கிற பெண்களால் எப்டி முகத்தை மறைத்துக் கொண்டிருக்க முடியும் என்ற கேள்விகளுக்கு தேவையே இருக்காது.
பெண்கள் முகத்தை மறைக்கத் தேவையில்லை என்று வாதிட்ட ஒரு நண்பரிடம் ''முகம்தானே உடலின் முக்கிய பகுதி! அழகு, உணர்ச்சி, கவர்ச்சி அனைத்துக்கும் பிரதானமாக இருப்பது முகம் தானே! மற்றவை அனைத்தையும் மறைத்து விட்டு முகத்தை மறைக்க தேவையில்லை என்று சொல்வது பீரோவை பூட்டிவிட்டு சாவியை பகத்திலலேயே வைத்துவிடுவது போன்றதல்லவா?!'' என்று கேட்டேன். அவரால் பதில் தர முடியவில்லை.
நண்பரே நான் கேட்ட கேள்வியை நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள்! பார்தா விஷயதில் மார்க்க சட்டத்தை முழமையாக படியுங்கள் உங்களுக்கு எந்த குழப்பமும் வராது என்று சொன்னேன். முதலில் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் உண்டு. மானத்தை மறைக்க நாம் அணிகிற ஆடை பர்தா அல்ல. அதற்கு மேலே அணிகிற துப்பட்டி அல்லது புர்காவிற்கு தான் பர்தா என்று சொல்லப்படும். சுடிதாரே பர்தா தான் பேசுகிற பேர்வழிகள் பாலும் தண்ணீர்தான் என்று பேசுகிற சாமார்தியசாலிகள் என்பதை தவிர அவர்களுடைய கருத்துக்கும் இஸ்லாத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
அப்படிச் சொல்பவர்கள் ஹிஜ்ரீ 5 ம் ஆண்டுக்கு முன்புவரை ஸஹாபா பெண்மணிகள் அரைகுறையாகவே ஆடை அணிந்து கொண்டிருந்தனர் என்றும் சொல்லத் தயங்க மாட்டார்கள். ஏனெனில் பர்தாவைச் சட்டமாக்கிய இறைவசனம் ஹிஜ்ரீ 5 க்கு பின்னரே இறங்கியது. அந்த வசனம் சுடிதாரைத் தான் குறிக்கிறது என்றால் அதற்கு முன்னால் முஸ்லிம் பெண்கள் அவ்வாறு அணியவில்லை என்று தானே பொருள் வரும். எனவே இது சரியான ஆய்வு அல்ல என்று தள்ளிவிடவேண்டும். பர்தாவைவைப் பற்றி பேசுகிற பலரும் ''ஸித்ருல் அவ்ரத்'' என்கிற மானத்தை மறைக்கிற ஆடை விஷயத்தையும் பர்தா விஷயத்தையும் இணைத்து குழப்பிக் கொள்வதுண்டு. அவ்ரத்தை மறைக்கிற ஆடை என்பது மனித சமுதாயத்தின் நாகரீக வரலாற்றில் இஸ்லாத்திற்கு முன்பிருந்தே தொன்று தொட்டு நடைமுறையில் இருந்து வருகிற ஒரு பழக்கமாகும்.
தனக்கு முந்தைய நல்ல விஷயங்கள் அனைத்தையும் தன்னுடையதாக சுவீகரித்துக கொண்ட இஸ்லாம் இந்த விஷயத்தையும் ஏற்றுக் கொண்டது. ஆகவே மானத்தை மறைக்கிற ஆடையின் வழக்கை அன்றைய நடைமுறைப்படி ஆண்கள் தொப்புளிலிருந்து முழங்கால் வரையும் பெண்கள் முகம் கால் பாதங்கள் தவிர உள்ள அனைத்து பகுதியையும் மறைக்க வேண்டும் என்று இஸ்லாம் வரையறுத்தது. பெண்கள் மறைக்க வேண்டிய பகுதியிலிருந்து முகம் மணிக்கட்டுகள் பாதங்களுக்கு விலக்களிக்கப்பட்டது. எனவே பெண்கள் தொழும் போது இவற்றில் ஏனினும் வெளியே தெரிந்தால் தொழுகையை அது பாதிக்காது என்று சட்டம் சொல்லப்பட்டது. எனவே பெண்களுக்கான சித்ருல் அவ்ரத்தில் முகம் மணிக்கட்டு பாதம் ஆகியவை இடம் பெறாது என்பது அனைத்து அறிஞர்களின் ஏகோபித்த கருத்தாகும்.
கவனிக்கவும் ''ஸித்ருல் அவ்ரத்'' என்ற மானத்தை மறைக்கிற ஆடை விஷயத்தில்தான் முகத்திற்கு ஏகமனதாக விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. பெண்கள் பர்தா என்கிற துப்பட்டி அல்லது பர்கா அணிய வேண்டும் என்பது ஹிஜ்ரீ 5 ம் ஆண்டில் திருக்குர்ஆனின் கட்டளைப்படி உருவாக்கப்பட்ட ஒரு புதிய நடைமுறையாகும்.
அஹ்ஜாப் என்கிற திருக்குர்ஆனின் 33 வது அத்தியாத்தில் இடம் பெற்றுள்ள பர்தா வசனங்கள் எனப்படுகிற 53 முதல் 59 வரையுள்ள வசனங்கள் இது பற்றி பேசுகின்றன. ''...நபியுடைய மனைவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டுக்) கேட்டபதாக இருந்தால், திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே உங்கள் இருதயங்களையும் அவர்கள் இருதயங்களையும் தூய்மையாக்கி வைக்கும்; அல்லாஹ்வின் தூதரை நோவினை செய்வது செய்வது உங்களுக்கு தகுமானதல்ல...'' (33:53)
''அவர்கள், தங்களுடைய தந்தையர் முன்பும், தங்கள் ஆண் மக்கள் முன்பும் தங்கள் சகோதரர்கள் முன்பும், தங்கள் சகோதரர்களின் ஆண்மக்கள் முன்பும், தங்கள் சகோதரிகளின் ஆண்மக்கள் முன்பும், அவர்களின் பெண்கள் முன்பும்; அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் முன்பும் (வருவது) அவர்கள் மீது குற்றமாகாது எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றுக்கும் சாட்சியாக இருக்கின்றான்.'' (33:55)
''நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக் அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு தீங்கு செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும்...'' (33:59)
இந்த வசனங்கள் பெண்களது கண்ணியம் பாதுகாக்கப்படுவதற்காக பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே ஒரு மறைப்பு பேணப்பட வேண்டும். தேவையின் பொருட்டு; ஆண்களுக்கு முன்னிலையில் பெண்கள் வெளிப்பட நேர்ந்தால் அவர்கள் பிரச்சினைக்கு ஆளாகாத வகையில் தங்களை மறைத்துக் கொள்ளத் தகுந்த போர்வை ஒன்றை அணிய வேண்டும். அந்த ஆடை அவர்கள் கண்ணியமானவர்கள் என்று அறியப்படவும்; உதவுக்கூடிய வகையில் அமைந்திருக்க வேண்டும் என்ற கட்டளையை தெளிவாக உணர்த்துகின்றன. இதன் வழியே பர்தா விஷயத்தில் இஸ்லாமின் தத்துவத்தையும் நோக்கத்தையும் தெளிவாக அறிய முடிகிறது.
இப்படி ஒரு நடைமுறையை உருவாக்கியது பெண்களை அடிமப்படுத்தி வைப்தற்காகவோ அல்லது தரம் தாழ்த்துவதற்காகவோ அல்ல. மாறாக பெண்களை பிரச்சினைகளிலிருந்து பாதுகாப்தற்காகவே என்று திருக்குர்ஆனே தெளிவு படுத்தியிருக்கிறது. திருக்குர்ஆனின் அந்நூர்(24) அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ள 31 வசனத்தில் வெளிப்படையாகத் தெரிபவற்றை மறைக்கத் தேவையில்லை என்று ஒரு வாசகம் வருகிறது. மறைக்க இயலாத அல்லது பிரச்சினைகளை ஏற்படுத்தாது வெளிப்படையாகத் தெரிகிற பாகங்களை மறைக்கத் தேவையில்லை என்ற கருத்தை அது தருகிறது.
இவ்வசனத்திற்கு விளக்கம் சொல்ல முற்படும் போது அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. வெளிப்படையாகத் தெரியக்கூடியது எனும் சொல் முகம் மணிக்கட்டு பாதம் ஆகியவற்றை குறிக்கிறது என்று நபித்தோழர் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும், இல்லை அது மேலே அணிகிற பர்தாவை குறிக்கிறது என்று நபித்தோழர் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் கருத்துச் சொன்னார்கள். இதனடிப்படையில் இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி, ஷாஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹி, அஹ்மது பின் ஹன்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி ஆகிய மூன்று இமாம்களும் முகமும் மறைக்கப்பட வேண்டியது தான் என்றும் இமாம் அபூஹனீஃபா ரஹ்மதுல்லாஹி அலைஹி பிரச்சினைக்கு இடமிருக்காது எனில் முகத்தை மறைக்கத் தேவையில்லை என்றும் சொன்னார்கள்.
இந்த சர்ச்சை, பர்தா குறித்த இஸ்லாமின் தத்துவத்தை சிதறடித்து விடக்கூடாது என்பதில் அனைவரும் உறுதியாக இருந்தனர். எனவே இறுதியாக மார்க்க அறிஞர்களின் கருத்துப்படி நிர்பந்தத்தின் பொருட்டோ இல்லது தேவையின் பொருட்டோ முகத்தை வெளிக்காட்டுவது அவசியம் எனில் அல்லது அதனால் பிரச்சினைகள் ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை எனில் முகத்தை வெளிக்காட்டுவதில் தவறில்லை. பிரச்சினைக்கு வாய்ப்புள்ள இடங்களாயின் முகத்தை மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இறுதியாக கருத்து கூறினர்.
பர்தா சட்டத்தை திருக்குஆன் அமுலாக்கியதின் நோக்கம் நிறைவேற வெண்டும் என்பதே சட்ட அறிஞர்களின் இறுதி அவாவாக இருந்தது. இந்த தெளிவை விளங்கிக் கொண்டு விட்டால் கேலி தொனிக்கிற கேள்விகள் எழுவதற்கு வாய்ப்பில்லை. செய்தி வாகிச்கிகிற பெண் முகத்தை மூடிக் கொண்டு செய்தி வாசிக்க முடியுமா? அலுவலகங்களில் வேலை செய்கிற பெண்கள் முகத்தை மூடிக் கொண்டிருப்பது சாத்தியமா? என்ற கேள்விகள் பொறுத்தமற்றவையாக ஆகிவிடும். சட்டம் குழப்பமாக இருக்கிறது என்று சொல்ல வாய் வராது.
பர்தா குறித்த இஸ்லாமின் தத்துவமே சரியானதல்ல என்று வாதிடுபவர்களை எதிர் கொள்வதற்கு வேறு வழிகள் இருக்கின்றன. அது இங்கு கவனத்திற்கு எடுக்கொள்ளத் தேவையில்லை. ஆனால் பர்தா சட்டத்தை ஏற்றுக் கொண்ட பிறகு அதில் குழப்பம் இருப்பதாக கூறுபவர்களுக்குத் தான் இந்த பதில் என்பதை இறுதியாக நினைவில் கொள்ள வேண்டும். இஸ்லாமிய சட்டங்கள் சரியாகத்தான் இருக்கின்றன நமது சுயநலப் போக்கினால் அல்லது அறியாமையினால் தான் குழப்பம் இருப்பதாகத் தோன்றுகின்றன என்பதற்கு வேறு சில உதாரணங்களும் உண்டு. அவற்றை விரிவாகப் பேசினால் இது கட்டுரையாக இல்லாமல் நெட்டுரையாகி நிண்டு விடும். ஆகவே சுருக்கமாக சில விஷயங்களைப் பார்க்கலாம்.
பீர் குடிப்பதில் தவறில்லை. அது போதை தரக்கூடியதல்ல என்று ஓரு நண்பர் சொன்னார். நான் சொன்னேன். பீரில் போதை இருக்கிறதா? இல்லையா? என்று எனக்குத் தெரியாது. ஆனால் அது மதுக் கடைகளில் மட்டுமே விற்கப்படுகிறது என்பதும் மது அனுமதிக்கபடுகிற மேல் நாடுகிளில் மளிகை கடைகளில் பீர் வைக்கப்பட்டிருந்தாலும் கூட அது 18 வயதக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே விற்கப்படுகிறது என்பதும் எனக்குத் தெரியும். ஒரு பொருளை மிகச் சாதாரணமாக போதைப் பொருட்களின் பட்டியலில் உலகம் சேர்த்திருக்கிற போது அது போதையூட்டக் கூடியதல்ல என்று சொல்லி ஒரு சந்தேகத்தை கிளப்புவதும் அதன் பிறகு இஸ்லாமிய சட்டம் தெளிவற்றது என்று கூறுவதும் சுயநலத்தினால் ஏற்படுகிற குழப்பமே தவிர இஸ்லாமிய சட்டத்தில் உள்ள குழப்பம் அல்ல நண்பரே! அந்தக் கிணற்றின் விளிம்பிலிருந்து எழுந்து வந்த விடுங்கள் என்று நான் சொன்னேன்.
அது போல நடப்பிலுள்ள சில வகை வட்டி நடைமுறைகளை அது இஸ்லாம் தடுத்திருக்கிற வட்டியல்ல என்று சிலர் வாதிட முனைகிறார்கள். ஆலிம்கள் எதிர்த்தால் பொருளாதாரம் பற்றி தெரியாதவர்கள் ஆலிம்கள் என்ற ஒரு வார்த்தையில் கதையை முடித்துவிடப் பார்க்கிறார்கள். வட்டி விஷயத்தில் இஸ்லாத்தில் ஒரு திட்டவட்டமான தெளிவான கருத்து கிடையாது என்றும் கூட பேச முற்படுகிறார்கள். இந்த குழப்பமும் சுயநலத்தினாலும் அறியாமையினாலும் ஏற்படக்கூடியதே தவிர இஸ்லாமிய சட்டவிதிகளில் தெளிவின்மையால் ஏற்பட்டதல்ல.
வட்டி என்றால் என்ன என்று புதிதாக விளக்கம் சொல்லத் தேவையில்லை. அது ஏற்கெனவே நடைமுறையில் உள்ள ஒரு விஷயம் தான். எவை நடைமுறையில் வட்டி என்று அறியப்படுமோ அவை அனைத்தும் வட்டிதான். இதற்கு புதிய ஆக்ஸ்போர்டு விளக்கங்கள் எதுவும் தேவையில்லை. இதைப் புரிந்து கொள்வதில் முஸ்லிம்களுக்கு எந்த தடுமாற்றமும் ஏற்பட்டதும் இல்லை. வங்கிகளில் சேமிப்புக் கண்க்குகளில் போடப்படுகிற தொகைக்கு வங்கிகள் தருகிற அதிகப்படியான பணம் வட்டி அல்ல என்று சிலர் வாதிடுகிறார்கள். அந்த வாதம் சரியானது அல்ல. வங்கிகள் அதை வட்டி என்று தான் குறிப்பிடுகினறன. வட்டி என்ற வார்த்தையில் குறிப்பிடப்படுகிற ஒரு பொருளை அது வட்டி அல்ல என்று சொல்வதும், இஸ்லாம் தடுத்துள்ள வட்டிக்கு வேறு அர்ததமும் வேறு நோக்கமும் இருக்கிறது. அந்த நோக்கம் இங்கு பொருந்தாது என்று பேசுவதும் மார்க்கச் சட்டத்தில் குழப்பத்தை நாமாக உண்டு பண்ணுவதாகும். அதில் தானாக ஏற்படுவது அல்ல.
பிறை பார்த்தல் விஷயத்திலும் இப்படித்தான். குழப்பம் சட்டத்தில் இல்லை. சட்டத்தை தம்மிஷ்டத்திற்கு வளைக்க முயற்சிப்பவர்களால் தான் ஏற்படுகிறது. அவரவர் பகுதியில் பிறை தென்படுவதை வைத்து நோன்பையோ பெருநாளையோ தீர்மாணிக்க வேண்டும் என்பது தான் நபிமொழியின் கருத்தாகும். உலகம் முழவதிலும் ஒரே நாள் பெருநாள் என்ற சிந்தனயை சிலர் அதில் திணிப்பதுதான் குழப்பத்திற்கு காரணமாகும்.
தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் பாலகுமாரன், என்ன பல நாட்கள் பெருநாள் கொண்டாடுகிறீர்கள்? ஒரு உலகளாவிய மார்க்த்தின் நடைமுறைகள் இப்படி அமையலாமா? என்று கேட்டார். உலகம் முழுவதிலுமுள்ள முஸ்லிம்கள் ஒரே நாளில் பெருநாள் கொண்டாடினால் அது பள்ளிக் கூட யூனிபார்ம் போல அடையாளத்தில் ஒன்று படலாம், ஆனால் முஸ்லிம்கள் வெவ்வேறு நாட்களில் பெருநாள் கொண்டாடினாலும் அனைவரும் எடுத்துக் காட்டுகிற நபிமொழி ஒன்று தான் என்பதை கவனித்துப் பார்த்தீர்களானால் பெருநாள் கொண்டாடுவதில் வேறுபட்டாலும் நபிமொழிக்கு மரியாதை தருவதில் அனைவரும் ஒன்று படுகிறார்கள் என்பதை அறிவீர்கள். அடையாளத்தில் ஒன்று படுவதை விட கருத்தில் ஒன்று படுவது மேன்மையானதல்லவா என்று கேட்டேன்.
''ஓ இப்படி ஒரு விஷயம் இருக்கிறதா?'' என்று அவர் ஆச்சரியப்பட்டார். அதே போல பிறை யார் வேணடுமானாலும் பார்க்கலாம். ஆனால் நோன்பு தொடங்குவதை அறிவிப்பதோ பெருநாளை அறிவிப்பதோ தனிமனிதனரின் அதிகார வரம்பிற்குட்பட்டதல்ல. அது அதற்கான அதிகாரம் தரப்பட்டிருப்பவரின் பொறுப்பாகும். அதிகாரம் வழங்கப் பட்டிருப்பவரின் அறிவிப்பிற்கு செவி சாய்ப்பதே இஸ்லாமமாகும். நான் பார்த்துவிட்டேன் நீங்கள் எல்லோரும் நோன்பு வையுங்கள் என்று சொல்வதற்கு யாருக்கும் அதிகார கிடையாது. அதிகாரம் தரப்பட்டிருக்கிறவருக்கு கட்டுப்டுவதை விடுத்து ஆளாளுக்கு முத்தவல்லிகாளக மாற மக்கள் முயற்சிப்பதே பிறை விஷயத்தில் குழப்பம் ஏற்படுவதற்கான காரணம் ஆகும்.
தமிழகத்தை பொறுத்தவரை அரசின் தலைமை காஜியாக இருப்பவர் பிறை அறிவிப்பு செய்திகிற அதிகாரத்தை பெற்றிருக்கிறார். அவர் அதிகாரத்தை எப்படி பெற்றார் என்பது தேவையற்ற கேள்வியாகும். நமக்கு உத்தரவிட ஒரு தலைவர் இருக்கிறார் என்பதை நமக்கு கிடைத்த அருளாக கருதி அதை நாம் ஒன்று படுவதற்கு கிடைத்த வாயப்பாக முஸ்லிம் சமுதாயம் நினைக்கத் தொடங்குமானால் பிறை பற்றிய சட்டத்திலும் குழப்பம் ஏற்படாது. சமூகத்திலும் சலசலப்பு உருவாகாது. இது போலவே இன்னும் பல விஷ்யங்களை அடுக்கிக் கொண்டு பொகலாம். மார்க்கத்தின் சட்டங்கள் சரியாகவும் தெளிவாகவுமே இருக்கின்றன. நமது சுயநலத்தினாலும் போதிய ஆய்வின்மையினாலும் குழப்பங்கள் ஏற்படுகின்றன என்ற உண்மையை உணர்ந்து கொள்ள இவை போதும் என்பதால் இத்துடன் நிறுத்துகிறேன். வாருங்கள். வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகிவிட்டது என்பதை அனுபவித்து உணர்வோம்.
சிந்தனைச் சரம், மாத இதழில் வெளியான கட்டுரை.
நன்றி:நீடூர்.இன்ஃபோ

0 கருத்துகள்: