கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

‘‘வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்கும் ஆணையம்’’ & ‘‘ஆணையிடுமா தமிழக அரசு?’’

பிரியமுள்ள பிறைநெஞ்சுக்கு! எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின்மீதும் என்றென்றும் இலங்கட்டுமாக!

நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற 5.11.2013 அன்று டில்லிக்குச் சென்றிருந்தேன். வெளிநாடுகளிலுள்ள நமது நாட்டின் தூதர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் மூன்று நாள் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய மாண்புமிகு பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் இந்திய நாட்டின் வெளியுறவுக் கொள்கையின் ஐந்து முக்கிய அம்சங்களை குறிக்கோளாகக் குறிப்பிட்டு உரையாற்றியதையும் அவைகளின் அவசியம் பற்றி வெளிநாடுகளில் பணியாற்றும் அனைத்து இந்தியத் தூதர்களும் விவாதித்து, ஆய்வுகள் நடத்தி செயல்வடிவம் தரவேண்டும் என்று குறிப்பிட்டதையும் எல்லா ஊடகங்களும் செய்தி வெளியிட்டன.

இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய சர்வதேச சூழலை உருவாக்குவது; உலகமய சூழலுக்கு ஏற்ப இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவது; வல்லரசு நாடுகளுடனான உறவை பலப்படுத்துவது; அண்டை நாடுகளுடனான மற்றும் தெற்காசிய நாடுகளுடனான நட்புறவை மேம்படுத்துவது; இந்தியாவில் உள்நாட்டுச் சூழலை சர்வதேச இலக்குடன் ஒன்றிணைப்பது. இந்த முக்கிய ஐந்து அம்சங்கள்தான் பிரதமர் பேச்சின் சாராம்சம். அவருடைய பேச்சின் வீச்சில் வீரியம் தெரிவதை எவரும் மறுக்க முடியாது; பாராட்ட வேண்டும். வீரியம் தெரிகிற அளவுக்கு காரியம் நடக்கிறதா? என்றால் கவலைதான் குடிகொள்கிறது. அண்டை நாடான பாகிஸ்தானுடன் பெருந்தன்மையோடு நாம் கொண்டிருந்த உறவு முற்றிலுமாக முறிந்துவிட்டதைப் போன்ற நிலை; எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தானையும் சீனாவையும் தேவையான அளவுக்குக்கூட கண்டிக்க பலமில்லாத தோற்றம்; இலங்கை அரசின் தமிழ் இனப்படுகொலையையும், மனித உரிமை மீறல்களையும் கண்டித்து குரல் எழுப்பும் மனித உரிமை ஆணையத்தின் வார்த்தைகளை திருப்பிச் சொல்லக்கூட காட்டிடும் தயக்கம். இவைகளெல்லாம் அண்மைக் காலத்தில் நடுநிலையோடு நோக்கும் ஒவ்வொரு இந்தியனையும் ஆழ்ந்து சிந்திக்க வைத்திருக்கின்றன. இன்னும் ஒருபடி உயரப் போய் சொன்னால் நம் நாட்டின் தற்போதைய வெளியுறவு சாதனைகள் என்று சரித்திரத்தின் முந்தைய நிகழ்வுகளைப்போல ஒன்றும் பெரிதாகச் சொல்வதற்கில்லையே என்றுதான் எண்ணிடத் தோன்றுகிறது.

அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் பனிப்போர் நடந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் அன்றைய இந்தியாவின் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் அணிச் சாராக் கொள்கை அப்போதைய வளர் பொருளாதார நாடுகளின் தலைமையை இந்தியாவுக்குப் பெற்றுத் தந்தது; 1961&யில் யூகோஸ்லோவாகியாவின் தலைநகர் பெல்கிரேடில் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்தோனேஷிய அதிபர் சுகர்னோ, எகிப்து அதிபர் கமால் அப்துல் நாசர், கானா அதிபர் கிவாமே நிக்ரூமா, யுகோஸ்லோவாகியா அதிபர் ஜோசப் டிட்டோ ஆகியோர் கூடி மூன்றாவது உலக நாடுகளின் அமைப்பை உருவாக்கக் காட்டிய முனைப்பில் இந்தியாவின் பங்கு உலகளாவிய அளவில் பெருமையாகப் பேசப்பட்டது;

அன்னை இந்திரா காந்தி அவர்களின் தலைமையில் இருந்த இந்தியா அன்றைக்கு தனது அண்டை நாடுகளான பாகிஸ்தானையும், இலங்கையையும் தன்னை அண்ணாந்து பார்க்க வைத்தது; இப்படி சரித்திரப் பின்னணி கொண்ட பல்வேறு நிகழ்வுகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். இவையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். இப்போது கொழும்பில் நடைபெறுகிற காமன்வெல்த் மாநாட்டுக்குச் செல்வதை உணர்வுப்பூர்வமாகத் தவிர்ப்பதன் மூலம் இனப்படுகொலை செய்து, உள்நாட்டுப் போரில் விதிமுறைகளை அத்துமீறி, மனித உரிமைகளைக் கொஞ்சமும் மதிக்காமல் அடாவடித் தாண்டவம் ஆடிய இலங்கையின் போக்கை உலக அரங்கில் உரித்து வைக்கக்கூடிய அருமையான வாய்ப்பை வேண்டுமென்றே இந்தியா இழந்திருக்கிறது என்பதையும் இங்கே சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. இந்த முறை இம்மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளாமல் தனது நியாயமான நிலைபாட்டை வெளிக்காட்ட வேண்டும் என்றுதான் கருத்து வேறுபாடின்றி அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழ் மக்களின் ஒருமித்த குரலாய் நின்று ஒளித்தன; அதனை மத்திய அரசு கண்டு கொள்ளவே இல்லை; ‘‘பிரதமர் கலந்து கொள்ளமாட்டார்; வெளிவிவகாரத்துறை அமைச்சர் மாண்புமிகு சல்மான் குர்ஷித் தலைமையில் இந்தியக்குழு செல்லும்’’ என்று அறிவித்து இலங்கைக்குச் சென்றதின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உணர்வுகளை மத்திய அரசு மிக ஆழமாகக் காயப்படுத்தியிருக்கிறது என்றுதான் செய்திகள் உலா வருகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக தமிழக சட்டமன்றத்தில் பிரதான எதிர்கட்சிகளும் பேராதரவு தெரிவித்து நிறைவேற்றிய ‘‘காமன்வெல்த் மாநாட்டுக்கு இந்தியா செல்லக்கூடாது’’ என்ற தீர்மானத்தை மத்திய அரசு கண்டு கொள்ளவே இல்லை என்கிற கோபம் இப்போது தமிழ் மக்களை ஆட்கொண்டிருப்பதையும் சாதாரணமான எண்ணிவிட முடியாது.

இந்தியாவின் வெளியுறவு சம்பந்தப்பட்ட இப்போதைய நிலைமை இப்படியிருக்க வெளிநாடுகளில் அதிலும் குறிப்பாக வளைகுடா நாடுகளில் பணி செய்திடும் இந்தியர்களின் நிலை பல்வேறு தலங்களில் கேள்விக்குறியாகவே உள்ளதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். உலகின் பல நாடுகளிலும் இந்தியர்கள் வணிகத்திலும் ஈடுபட்டிருக்கிறார்கள்; குறிப்பாக வளைகுடா நாடுகளில்தான் இந்தியர்கள் அதிகமதிகம் உள்ளனர். அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு செய்திக் குறிப்பு சவுதி அரேபியாவில் 28 லட்சம், ஐக்கிய அரபு அமீரகத்தில் 20 லட்சம், குவைத்தில் 7 லட்சம், கத்தரில் 6 லட்சம், பஹ்ரைன் மற்றும் ஓமனில் தலா 5 லட்சம் என்று இந்தியர்கள் வாழும் எண்ணிக்கையை வெளியிட்டிருக்கிறது. அந்தந்த நாடுகளிலும் இந்தியர்களின் பிரதிநிதித்துவ அங்கமாக இந்தியத் தூதரகங்களும், துணைத் தூதரகங்களும் செயல்படுகின்றன. இத்தனை லட்சம் இந்தியர்களின் தூதரகத் தேவைகளை இந்த அலுவலகங்கள் அறிந்து பூர்த்தி செய்கின்றனவா அல்லது பூர்த்தி செய்திட முடியுமா? என்றால் இல்லை. காரணம் ஒவ்வொரு நாட்டின் தூதரக அலுவலகத்திலும் அதிகபட்சமாக இருபது அல்லது முப்பது அலுவலர்கள்தான் பணிபுரிகிறார்கள். இவர்களை வைத்துக் கொண்டு லட்சக்கணக்கில் வாழும் இந்தியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவியலாது என்பது யதார்த்தம். அதிலும் திடீர் சட்டதிட்டங்களாலும், பொது மன்னிப்பு அறிவிப்புகளாலும் பாதிக்கப்படுகிற இந்தியர்கள் அதிலும் குறிப்பாக பாஸ்போட்டுகளைத் தொலைத்துவிட்டு வேலை செய்யும் நிறுவனங்களிலிருந்து தப்பி வெளியாகி அலைந்து திரியும் சாமானிய தொழிலாளர்கள் தூதரகத்தை அணுக முடியாமல் தத்தளிக்கும் அவலக் காட்சிகள் கொடுமையானவை. இதன் காரணமாக இத்தனை லட்சக்கணக்கான இந்தியர்களுக்காக ஆயிரக்கணக்கில் அலுவலர்களை நியமிக்கவும் முடியாது. அதனால்தான் ஐக்கிய அரபு அமீரகம் & துபாயில் தூதரகத்தின் அனுமதியோடு பல்வேறு மாநில மக்களின் நலச்சேவை அமைப்புகளின் பிரதிநிதிகள், மிகப் பெரிய இந்தியத் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பல எண்ணிக்கையில் உறுப்பினர்களை முறையாக ஒருங்கிணைத்து சில சட்டதிட்டங்களையும் வகுத்து மிசிகீசி (மிஸீபீவீணீஸீ சிஷீனீனீuஸீவீtஹ் கீமீறீயீணீக்ஷீமீ சிஷீனீனீவீttமீமீ) (இந்திய சமூக நலக் குழுமம்) என்ற அமைப்பை ஏற்படுத்தி தூதரகத்தை நாடி வருகிற கட்டுக்கடங்காத கூட்டத்தையும் சமாளிக்கும் அளவுக்கு சேவைகள் முடுக்கிவிடப்படுகின்றன. பிரதிநிதிகளும் ஆர்வத்துடன் தன்னலமுமோ, பிரதிபலனோ பாராமல் தாமாக முன்வந்து பணிகள் செய்வதைப் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு வாரமும் தனித்தனிக் குழுக்கள் அமைத்து சிறைச்சாலைகள், மருத்துவமனைகள், தொழிலாளர்களின் தங்கும் கூடாரங்கள் என பல்வேறு தலங்களுக்கும் நேரில் சென்று அவதியுறும் இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திடும் பாங்கு மிகவும் அற்புதமானது. இன்றளவும் இப்பணிகள் தொடர்ந்து நடக்கின்றன. இதைப்போல இந்தியர்கள் மிக அதிகமாக வாழ்கிற நாடுகளில் எல்லாம் ஒரு இதப்போன்ற ஒரு குழுமத்தை ஏன் ஏற்படுத்தக்கூடாது? துபாயில் மிகச் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் செயல்படுத்தப்படும் இந்த நடைமுறையை மற்ற நாடுகளிலும் செயல்படுத்த ஏன் ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளக்கூடாது? இந்த கேள்வியை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஒரு விவாதத்தின்போது எழுப்பினேன். இதுவரையிலும் இத்திட்டத்தை செயல்படுத்தக்கூடிய ஒரு சிறு அறிகுறியைக்கூட வெளிவிவகாரத் துறை வெளிக்காட்டவில்லை.

வெளிநாடுகளில் வேலை செய்து, பொருளீட்டி அந்தப் பணத்தை நமது நாட்டுக்கு அனுப்பி வைப்பதன் மூலம் கிடைக்கும் வெளிநாட்டுச் செலாவணி வருமானம் என்பது இந்திய நாட்டின் பொருளாதார ஏற்றத்திற்கு எந்த அளவு பெருந்துணையாக அமைகிறது என்பதை எல்லோரும் அறிவோம். அத்தகைய வெளிநாடு வாழ் இந்தியர்களின் இன்றைய நிலை என்ன? திடீர் திடீரென வெளியாகும் அந்தந்த நாட்டு அரசு அறிவிப்புகளால் அல்லலுறும் இந்தியர்களுக்குப் போதுமான நிவாரண உதவிகளை இந்தியத் தூதரகங்கள் செய்கின்றனவா? குறைந்தபட்சம் அவர்களின் குறைகளை காது கொடுத்தாவது தூதரக அதிகாரிகள் கேட்கின்றனரா? இல்லை; இல்லவே இல்லை. அண்மையில் குவைத் நாட்டின் திடீர் சட்ட அறிவிப்பால் பாதிப்புக்குள்ளாகிய இந்தியர்களின் நிலை என்னவாயிற்று? இப்போது சவூதி அரேபியாவில் சட்டக் கெடுபிடியால் சிக்கித் தவித்திடும் லட்சக்கணக்கான இந்தியர்களின் நிலை என்ன? தெளிவான பதில் உண்டா? வாயிருந்தும் ஊமைகளாய், அறிவிருந்தும் அபலைகளாய் அலைக்கழிக்கப்பட்டு, பட்டினி பசி என்றெல்லாம் பழுதடைந்த கோலங்களில் சிக்குண்டு தப்பித்தோம், பிழைத்தோம் என்று இந்தியாவுக்குள் வந்து விழுகிறவர்களின் பெருமூச்சில் அடங்கிக் கிடக்கும் அனலின் அளவை யாராகிலும் கணக்கிட முடியுமா? இந்திய அரசு சில நேரங்களில் அவசர உதவி என்று வேண்டுமானால் சில விமானங்களை அனுப்பி அவதியுறுகின்ற சிலரை அங்கிருந்து ஏற்றிக் கொண்டு வந்துவிடலாம். குறைந்தபட்சம் இதையாவது செய்கிறார்களே என்று நன்றி சொல்லத்தான் வேண்டும். இத்தகைய நிலையில் நாடு திரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சொந்த நாட்டில் பிழைப்பு நடத்த ஏதாகிலும் நிவாரணத் திட்டம் உண்டா? இத்தகைய கோரிக்கைகளை வெளிப்படுத்தி எத்தனை ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இதற்கு என்ன தீர்வு? பிறைநெஞ்சே!

நாட்டை ஆள்வோர்மீது குற்றப்பத்திரிகை வாசிப்பது நமது நோக்கமல்ல. இந்திய தேசத்தின் பொருளாதார ஏற்றத்திற்கு மிகவும் பின்புலமாக இருக்கும் வெளிநாட்டுச் செலாவணி வருமானத்தை ஈட்டித்தரும் வெளிநாடுவாழ் இந்தியர்களின் திரும்புதலுக்குப் பிறகு அவர்களின் வாழ்வாதாரத் தீர்வுதான் என்ன? என்று கேட்பது நமது கடமை. வருகிற 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அமையவிருக்கும் புதிய அரசாவது இனிமேலும் காலம் தாழ்த்தாது இந்த விவகாரத்தில் விரைந்து செயல்படும் என்று எதிர்பார்ப்போம்.

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் மாநாட்டினை இந்தியாவில் நடத்துகிறது. இந்த மாநாட்டின் மூலம் இதுவரையிலும் என்ன அற்புதம் நிகழ்ந்திருக்கிறது. அதனால் விளைந்த பலன்கள்தான் என்ன? அண்மையில் டில்லியில் நடந்து முடிந்த இந்தியத் தூதர்களின் மாநாட்டில் பிரதமர் கோடிட்டுக் காட்டிய முக்கிய ஐந்து குறிக்கோள்களில் வெளிநாடு வாழ் இந்தியர்களைப் பற்றிய என்ன செய்தி வெளிக்காட்டப்பட்டது? ‘ஒன்றும் இல்லையே’ என்கிற ஏமாற்றம்தான் பதிலாகக் கிடைக்கிறது.

இதற்காகத்தான் வெளிநாடு வாழ் தமிழர்களின் நலனுக்காக ஒரு தனி வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று 2011 ஆம் ஆண்டு சென்னை & தாம்பரத்தில் நடைபெற்ற தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் வேண்டுகோள் வைத்தோம். அப்போதைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் நம் கோரிக்கையை ஏற்று மேடையிலேயே ஒப்புதல் அளித்து அதிகாரிகளுக்கு ஆணையும் இட்டார். அடுத்தடுத்த மாதத்தில் பொதுத் தேர்தலும் வந்தது; ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது; வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன்காக்கும் ஆணையம் அமைத்திடும் ஆணையும் கிடப்பில் போடப்பட்டது.

குறைந்தபட்சம் இப்போதாவது நிலைமையறிந்து தமிழக அரசு இந்த ஆணையம் அமைவதில் கவனம் செலுத்துமா? செலுத்தும் என்று எதிர்பார்ப்போம்; வெளிநாடு வாழ் தமிழர்களின் சோகங்களுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புவோம்! இன்ஷா அல்லாஹ்.
  முஸ்லிம் லீக்

0 கருத்துகள்: