கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

மதவாத சக்திகளுக்கு என்றும் இடம் தரமாட்டோம் மணிச்சுடர் வெள்ளி விழாவில் கருணாநிதி பேச்சு


மணிச்சுடர் நாளிதழின் 25-ம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பு மலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் முகமது அபூபக்கர் வரவேற்று பேசினார். எம்.அப்துல் ரகுமான் எம்.பி. அறிமுக உரையாற்றினார்.

மத்திய இணை மந்திரி அகமது சாஹிப், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் தலைவர் கி.வீரமணி, முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
விழாவில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு மணிச்சுடர் வெள்ளி விழா சிறப்பு மலரை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கறுப்புச் சட்டைக்கு வேலை இருக்கிறது

1945-ல் ஈரோடு குருகுலத்தில் பெரியார் தொடங்கிய கறுப்புச் சட்டை படையில் நான் சேர்ந்தேன். 1945-ல் கறுப்புச் சட்டைக்கு வேலை இருந்தது. இப்போதும் கறுப்புச் சட்டைக்கு வேலை இருக்கிறது என்பதால் கறுப்புச் சட்டை அணிந்திருக்கிறேன். இனி, தினந்தோறும், ஒவ்வொரு நாளும், கறுப்புச் சட்டையை கடைசிவரை அணிவேன். தமிழகத்தின் இழிவு துடைக்கப்படும் வரை, கறுப்புச் சட்டையை அணிவேன்.

மதவாத சக்திக்கு தி.மு.க. இடம் தராது

முஸ்லிம்களை பொறுத்தவரை அவர்கள் மைனாரிட்டிகள். ஜெயலலிதா கூறுவதுபோல் தி.மு.க.வும் மைனாரிட்டிதான். தி.மு.க. மைனாரிட்டி மக்களுக்காக நடக்கும் ஆட்சி என்று சட்டமன்றத்தில் கூறினேன். ஆந்திரா போன்ற மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு கொடுத்தபோது அதை அறிக்கை விட்டு எதிர்த்தவர்கள் யார்?

தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீதம் ஒதுக்கீடு என்று நான் சொன்னேன். அதை எதிர்த்தவர்கள் யார், யார்? என்று தெரியும். அதை மறந்திருக்க மாட்டார்கள்.

என்றைக்கும் நாம் மதவாதத்துக்கு இடம் தரக்கூடாது. தி.மு.க. என்றும் மதவாதத்துக்கு இடம்தராது. பா.ஜ.க.வில் இருக்கும்போது மதவாத சக்திக்கு இடம் தரும் சூழல் ஏற்பட்டபோது உறவை அறுத்துக் கொண்டு வந்த இயக்கம்தான் தி.மு.க. இந்தியாவில், தமிழகத்தில் மதவாத சக்திகளுக்கு என்றும் இடம் தரமாட்டேன்.

இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார்.

விழாவில், மாநிலச் செயலாளர்கள் கே.எம்.நிஜாமுதீன், கமுதி பஷிர், மில்லத் இஸ்மாயில், சிறுபான்மை சமூகத் தலைவர் லியாக்கத் அலிகான், எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், வசந்தி ஸ்டான்லி, கவிஞர் காசிமுத்துமாணிக்கம், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியம், மேலை நாசர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்: